கொல்கத்தா: இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 55 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளும், சிராஜ் , குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர் . இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் இந்திய அணி விளையாடியது . தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் , ஜெய்ஸ்வால் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர் இருவரும் இணைந்து நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். இறுதியில் 20 ஓவர்களில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்தது. கேஎல் ராகுல் 13 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். 2வது நாள் இன்று நடைபெற்று வருகிறது. வாஷிங்டன் சுந்தர் 29 ரன்களிலும் , கேஎல் ராகுல் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த ரிஷப் பண்ட் 27 ரன்களில் ஆட்டமிழந்தார் இந்திய அணியில் ஜடேஜா, துருவ் ஜுரேல் ஆகியோர் தற்போது விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில ரிஷப் பண்ட் 2 சிக்சர்கள் பறக்க விட்டார். இதனால் அவர் சாதனை படைத்துள்ளார். அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் ரிஷப் பண்ட் முதலிடம் பிடித்துள்ளார்.
அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியல்:
ரிஷப் பண்ட் - 92
சேவாக் - 91
ரோகித் சர்மா - 88
ஜடேஜா - 80
தோனி - 78


