எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் மறுபக்கத்தில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ தீவிரவாதிகள் காத்திருக்கிறார்கள்: உளவுத்துறை தகவல்
நகர், அக்.9: ஜம்மு காஷ்மீர் எல்லையில் நவீன கண்காணிப்பு சாதனங்கள் பயன்படுத்துவதால் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகளின் ஊடுருவல் வெற்றிபெறவில்லை என்று மூத்த எல்லைப்பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் நகரில் காஷ்மீர் எல்லைப்பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி அசோக் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘‘ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் விழிப்புணர்வு மற்றும் நவீன கண்காணிப்பு சாதனங்களை பயன்படுத்துவது, எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ராணுவத்தின் ஆதிக்கம் செலுத்தியவிதம் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்பதை உறுதி செய்துள்ளன.
குளிர்காலத்துக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்வார்கள். எல்லைக்கட்டுப்பாடு கோட்டுக்கு மறுபக்கத்தில் ஏவுதளங்களில் தீவிரவாதிகள் காத்திருப்பதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளது. ஏவுதளங்களில் உள்ள அனைத்து தீவிரவாதிகளும் வெளிநாட்டினர். அங்கு காத்திருக்கும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். எனினும் உளவுத்துறை உள்ளீடுகள் மற்றும் பகுப்பாய்வுகளின்படி எந்த நேரத்திலும் சுமார் 100 முதல் 120 தீவிரவாதிகள் இருக்கலாம்” என்றார்.