Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோயிலில் சிறப்பு பூஜை செய்து ஒன்றிய அமைச்சருக்கு விபூதி பூசி ஆசி வழங்கிய புதுவை முதல்வர்

புதுச்சேரி: சேலத்தில் உள்ள அப்பா பைத்தியசாமியின் தீவிர பக்தராக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இருந்து வருகிறார். அரசியல் ரீதியாக எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அப்பா பைத்தியசாமியின் கோயிலுக்கு சென்று உத்தரவு பெற்று வருவது அவரது வழக்கம். இந்நிலையில் தனது ஆன்மிக குருவிற்கு புதுச்சேரி வீமகவுண்டன்பாளையத்தில் உள்ள தனது இல்லத்தின் அருகே அப்பா பைத்தியசாமி கோயில் ஒன்றை புதுவை முதல்வர் ரங்கசாமி கட்டியுள்ளார். தினமும் வீட்டில் இருந்து புறப்படும் முன் இந்த கோயிலுக்கு வந்து பூஜைகள் செய்து விட்டு தான் அவர் தன் பணிகளை தொடர்வது வழக்கம்.

மேலும், சனிக்கிழமைதோறும் பகல் 12 மணி முதல் சிறப்பு பூஜைகளை தானே முன்னின்று நடத்தி, மக்களுக்கு அன்னதானம் வழங்கி பரிமாறுவதுடன், அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவதையும் ரங்கசாமி வழக்கமாக கொண்டுள்ளார் இந்நிலையில் புதுச்சேரியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மரியாதை நிமிர்த்தமாக முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் ரங்கசாமி, அப்பா பைத்தியசாமி கோயிலுக்கு ஒன்றிய அமைச்சரை அழைத்து சென்று சுற்றி காட்டினார். தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜை செய்த முதல்வர் ரங்கசாமி, ஒன்றிய அமைச்சருக்கு ஆசீர்வாதம் செய்து நெற்றியில் விபூதி பூசி எலுமிச்சை பழத்தை பிரசாதமாக வழங்கினார்.