Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு ஆசிரியர் சங்கங்களிடம் இன்று கருத்து கேட்பு

சென்னை: ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு குறித்து, ஆசிரியர் சங்கங்களுடன் இன்று கருத்து கேட்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2011ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்து தற்போது பணியாற்றிவரும் ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்தது. இந்நிலையில், அந்த தேர்வு நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் அது திரும்பப் பெறப்பட்டது.

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தலைமையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கொண்ட ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. அதில், தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு எப்படி தகுதித் தேர்வு நடத்துவது, தேர்ச்சிக்கான மதிப்பெண்கள் எப்படி வைப்பது, உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட்டன. மேலும், கல்வியாளர்களிடம் கருத்து கேட்ட பிறகு தேர்வு நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில், அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் அழைத்து, அவர்களிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கருத்து கேட்க இருக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் செய்யப்பட்டு வருகிறது.