Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!!

புதுடெல்லி: டாஸ்மாக் முறைகேடு வழக்கில், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்கள் தொடர்பான முந்தைய உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த புதிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்தது. டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அவரிடமே திரும்ப ஒப்படைக்கவும், அவர் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி கடந்த 10ம் தேதி மனுவைத் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த இந்த மனு மீது, அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் வாதிடும்போது, ‘டாஸ்மாக் தொடர்பான வழக்கில் ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எந்தவித மாற்றமும் செய்ய முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்து, அமலாக்கத்துறையின் புதிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.