டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை நவம்பர் 30க்குள் அமல்படுத்த ஐகோர்ட் ஆணை..!!
சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை நவம்பர் 30க்குள் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மலை பகுதிகளில் மதுபாட்டில்களை வீசப்படுவதை தடுக்கவே, சுற்றுசூழல் மற்றும் வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு அமர்வு நீதிமன்றம் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்த உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதிகள், சதீஷ்குமார் மற்றும் பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், 15 மாவட்டங்களில் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும், திரும்பப் பெறப்பட்ட காலி பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் ரூ.25 கோடி அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது என்றும் டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 7 மாவட்டங்களில் இந்த திட்டம் பகுதியளவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும், மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்த அவகாசம் வேண்டும் என்றும் டாஸ்மாக் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், திடக்கழிவு மேலாண்மை சட்ட விதிகளின் படி காலி பாட்டில்களை நிறுவனங்கள் பெற வேண்டும். அது அவர்களுடைய கடமை என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், பாட்டில்களை வாங்க மறுத்த நிறுவனங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், மாநிலம் முழுவதும் நவம்பர் 30ம் தேதிக்குள் இந்த திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை அக்.10க்கு ஒத்திவைத்தனர்.