சென்னை : எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தை தற்காலிகமாக 2026ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள், தரப்பில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, டேங்கர் லாரிகள் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் முடித்து வைத்தது. எல்.பி.ஜி. எரிவாயு சப்ளை செய்யும் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தம் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய ஒப்பந்தங்களை வழங்க, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் டெண்டர் கோரியுள்ளன. டெண்டர் நடைமுறைகள் முடிந்து, பணிகள் ஒதுக்கும் வரை, தற்போதைய ஒப்பந்தங்கள், 2025 அக்டோபர் வரையும், 2026 பிப்ரவரி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளன.
ஒப்பந்த காலத்தை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், அக்டோபர் 9ம் தேதி முதல் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்த போராட்டத்துக்குத் தடை விதிக்க கோரி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்த போது, எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் , "புதிய டெண்டர் பணிகள் இன்னும் நிறைவடையாததால், தற்போதைய ஒப்பந்தத்தை 2026 மார்ச் மாதம் வரை நீட்டிக்க தயாராக இருப்பதாகவும் இடைப்பட்ட காலத்தில் புதிய டெண்டர் நடைமுறைகள் முடிக்கப்படும்," என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தற்போதைய ஒப்பந்தத்தை 2026 மார்ச் வரை நீட்டிக்க உத்தரவிட்டு, இடைப்பட்ட காலத்தில் எந்த வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று டேங்கர் லாரிகள் சங்கத்துக்கு உத்தரவிட்டும் வழக்கை முடித்து வைத்தார்.