Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு ஒன்றிய அரசு தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 25 மீனவர்களை நாட்டுப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. கடந்த ஜூன் 17ம் தேதி தொடங்கி நேற்று வரை இரு வாரங்களில் மட்டும் 61 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களில் 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளது. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 166 விசைப்படகுகளை பறிமுதல் செய்திருக்கிறது. இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய அட்டகாசத்தை தடுக்க வேண்டும் என்று பலமுறை ஒன்றிய அரசை வலியுறுத்தியும் இதே நிலை தொடர்வது கவலையளிக்கிறது. ஒன்றிய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை மீட்டுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் ஒன்றிய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.