Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழக வாலிபரை மீட்க கோரி வழக்கில் வெளியுறவுத்துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்: நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை

சென்னை: கம்போடியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக வாலிபரை மீட்கக் கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யாத ஒன்றிய வெளியுறவுத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோபி என்பவர், கம்போடியா நாட்டில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சட்ட உதவிகளை வழங்கி, இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி அவரது தாய் லதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க ஒன்றிய அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி, ‘இந்த வழக்கில் ஏற்கனவே 3 முறை அவகாசம் வழங்கியும் வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கமளிக்காதது கண்டனத்திற்குரியது. நீதிபதி அல்லது அமைச்சரின் மகன் இதுபோல சிக்கியிருந்தால் இப்படி செயல்படுவீர்களா?. மகனுக்கு என்ன ஆனது என்று தெரியாமல், சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் பரிதவிக்கும் தாயை நினைத்து பார்க்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் முக்கியமானவர். பிரதமராக இருந்தாலும் சரி, சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி. இந்த விவகாரத்தை தீவிரமாக கருதி, ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் உரிய விளக்கத்தை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், வெளியுறவுத் துறை செயலாளரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும்,’ என்று எச்சரித்து விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.