நெல்லை: தமிழகத்தில் தேஜ கூட்டணியில் பெரிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். நெல்லையில் அவர் அளித்த பேட்டி: அதிமுக கூட்டத்தில் தவெக கொடி பறப்பதை கவனித்தேன். அது தொண்டர்களாக ஒன்று சேரும் ஒரு விஷயம். அதுபோல் ஒட்டுமொத்த தமிழக மக்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓரணியில் திரளப் போவது உறுதி.
விஜய் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று பார்த்தால், பொதுமக்கள் மத்தியில் ஒரு பெரிய வரவேற்பு இருக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும், அவரது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற கோணத்திலும் பார்க்க வேண்டும். அதனால் விஜய் கரூரில் இருந்து சென்றுவிட்டார்.
தமிழகத்தில் கேங்மேன், ஆசிரியர் சங்கங்கள், துப்புரவுப் பணியாளர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் எனப் பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதற்கு அரசு பதில் அளிக்கவில்லை என்றாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஒட்டுமொத்தமாகப் பதிலளிப்பார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரிய கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் இணைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.