தமிழக சிறை கைதிகளின் தற்கொலை எண்ணத்தை தடுக்க ‘வாயிற் காப்பான்’: பிளாக் வாரியாக தூதுவர்கள் நியமனம், சீர்திருத்தும் பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை
தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகள் என்பது தண்டனைக்குரிய இடங்களாக இல்லாமல், சீர்திருத்தும் பள்ளிகளாக மாற்றுவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக சிறைகளில் இருந்து விடுதலையாகி வெளியே செல்பவர்களின் எதிர்காலம் பாதிக்காமல் இருக்க பல்வேறு தொழில்கள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும், கைதிகளின் மனமாற்றத்துக்கான சிறை வாளகத்திற்குள் நூலகம், வாலிபால், கேரம் போன்ற விளையாட்டு போட்டிகள் அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல், சிறை வளாகங்கள் மினி தொழிற்பேட்டையாக மாறியுள்ளது.
நன்னடத்தை கைதிகள் ஷூ தயாரிப்பு, தையல், சோப்பு, பேக்கிரி, தச்சு, முடி திருத்தகம், உணவகம், விவசாயம், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல தொழில்களில் கைதிகள் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், குற்றங்களில் ஈடுபட்டு புதிதாக சிறைக்கு வரும் கைதிகள், மனநிலை மாறி தற்கொலை எண்ணம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், சிறைக்குள் புதிதாக வரும் கைதிகளுக்கு, மனநல மருத்துவர்கள் கொண்டு கவுன்சில் கொடுக்க சிறைத்துறை டிஜிபி, அனைத்து சிறைத்துறை சரக டிஐஜி, மனநல மருத்துவர்கள், ஆலோசர்களுடன் இணைந்து ‘வாயிற் காப்பான்’ திட்டம் தொடங்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, உலக தற்கொலை தடுப்பு தினமான கடந்த 10ம் தேதி வேலூர் மத்திய சிறையில், சிறை கைதிகளுக்கு தற்கொலை தொடர்பாக எண்ணங்களை போக்குவது தொடர்பாகவும், கவுன்சிலிங் வழங்குவது தொடர்பாக ‘வாயிற் காப்பான்’ என்ற திட்டம் துவக்க விழா நடந்தது. விழாவுக்கு சிறை கண்காணிப்பாளர் தர்மராஜ் தலைமை தாங்கினார். சிறை அலுவலர் சிவபெருமாள், சிறை மருத்துவர் பிரகாஷ்ஐயப்பன், மனஇயல் நிபுணர் பாரதி, மனநல மருத்துவர் சிவாஜி, சமூகவியல் வல்லுனர் நடராஜ், நல அலுவலர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் 18 சிறைவாசிகள் கலந்து கொண்டு கொலை தொடர்பான எண்ணம் உள்ள கைதிகளை கண்டறியவது எப்படி? என பயிற்சி வழங்கப்பட்டது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சிறைக்குள் புதிதாக வரும் கைதிகள் மற்றும் நபர்களை வாயில் உள்ள காவலர்கள் விவரங்களை அறிந்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல், சிறைக்குள் புதிதாக வரும் கைதிகள், சிறைச்சாலையில் குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ முடியாத, சூழலில், மன அழுத்தம் அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.
இதை தடுக்கும் வகையில், ‘வாயிற் காப்பான்’ என்ற திட்டத்தின் மூலம் இனி வரும் நாட்களில் புதிதாக சிறைக்குள் வரும் கைதிகளை மனஇயல் நிபுணர்கள், மனநல மருத்துவர்கள், சமூகவியல் வல்லுனர்கள் கொண்ட குழுவினர்களுக்கு கொண்டு கவுன்சிலிங் வழங்கப்பட உள்ளது. இதில், மன அழுத்தம் தொடர்பான பிரச்னை உள்ள கைதிகளுக்கு தொடர்ந்து கவுன்சிலங் வழங்கப்பட உள்ளது.
அதேபோல், ஒரு பிளாக்கிற்கு ஒரு கைதியை தூதுவர்களாக நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு மனநல தொடர்பான கவுன்சிலிங் வழங்கப்பட உள்ளது. இந்த தூதுவர்கள் அந்த பிளாக்கில் அடைக்கப்பட்ட கைதிகளுக்கு மனநல தொடர்பாக பயிற்சி வழங்க உள்ளனர். மேலும் மன அழுத்தால் பாதிக்கப்பட்ட கைதிகள் குறித்து சிறை காவலர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் சிறைக்குள் கைதிகள் தற்கொலை எண்ணம், மனஅழுத்ததை குறைக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த திட்டம் தற்போது வேலூர் சிறையில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற மத்திய சிறைகளிலும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து, கிளை சிறையிகளிலும் இந்த திட்டம் துவங்கப்பட உள்ளது.
* ஆண்டுக்கு 7,27,000 பேர் தற்கொலை
உலகளவில் தற்கொலை விகிதம் கடந்த 20 ஆண்டுகளாக குறைந்து வருகிறது. இருப்பினும் உலகளவில் பல லட்சக்கணக்கானோரின் மரணத்திற்கு தற்கொலை ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 7.27 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்ளவதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவிக்கிறது.
தற்கொலைக்கு ஏராளமான காரணங்கள் இருந்தாலும், பெரும்பாலும் வாழ்க்கை முழுவதும் உள்ள சமூக கலாச்சார, உயிரியல், உளவியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் இடம்பெறுகின்றன. கடந்த 25 ஆண்டுகளில் 35 சதவீதம் தற்கொலை விகிதம் குறைந்துள்ளது. பல நாடுகளில் 1 லட்சம் பேருக்கு 13 மனநல பணியாளர்கள் என்கிற ரீதியிலேயே உள்ளனர்.