தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல்: 12 நிமிடத்தில் கூட்டம் முடிந்தது
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று கூடிய நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு 12 நிமிடங்களிலேயே கூட்டம் முடிந்தது. இன்று 2வது நாள் கூட்டம் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டம் நான்கு நாட்கள் நடைபெற்றது.
தொடர்ந்து மார்ச் 14ம் தேதி சட்டப்பேரவையில் 2025-26ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இதனையடுத்து, மார்ச் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடைபெற்றது. மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றன. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் பேரவை மரபுபடி ஆண்டிற்கு இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அதனடிப்படையில் இந்தாண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூட்டப்பட்டது. முன்னதாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் காலை 9 மணி முதலே சபைக்கு வர தொடங்கினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்குள் வந்தபோது திமுக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் எழுந்து மேஜையை தட்டி வரவேற்றனர்.
இதனையடுத்து, பேரவைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் அப்பாவு ‘‘தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை’’ என்ற திருக்குறளுடன் காலை 9.30 மணிக்கு கூட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ச.புரட்சிமணி, சு.குணசேகரன், வீ.செ.கோவிந்தசாமி, ஓ.எஸ்.அமர்நாத், ஆ.அறிவழகன், துரை அன்பரசன், ம.அ.கலீலுர் ரஹ்மான், இரா.சின்னசாமி ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு இரண்டு நிமிடம் உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கான இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதன் விவரம் வருமாறு: 27.9.2025 அன்று கரூரில் நடத்தப்பட்ட அரசியல் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து இந்த பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது. இந்த துயர செய்தியை அறிந்தவுடன் அன்றிரவே முதல்வர் அங்கு விரைந்து சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், படுகாயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டார்.
மருத்துவ சிகிச்சைக்கு சிறப்பு ஏற்பாடுகளை துரிதப்படுத்த அமைச்சர்களை உடனே அனுப்பி வைத்தார். சிகிச்சை பெற்று வருகிறவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்ற ஆவலை இந்த பேரவை தெரிவிக்கிறது. இந்த துயர சம்பவத்தில் இறந்தவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு இந்த பேரவை ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது என்றார்.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்த, 41 பேர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, கேரள மாநில முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன், நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் பொது செயலாளர் சுதாகர் ரெட்டி, அரசு முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி அனைத்து உறுப்பினர்களும் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, தற்போதைய வால்பாறை அதிமுக சட்டமன்ற பேரவை உறுப்பினர் டி.கே.அமுல் கந்தசாமி மறைவிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்ட பின் உறுப்பினர்கள் மீண்டும் எழுந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (நேற்று) நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்படுவதாகவும், மீண்டும் நாளை (இன்று) காலை 9.30 மணிக்கு பேரவை கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். நேற்றைய சட்டப்பேரவை கூட்டம் 12 நிமிடத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
* எடப்பாடியை கண்டுகொள்ளாத செங்கோட்டையன்
இன்றைய கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வரவில்லை. இருப்பினும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் கூட்டத்திற்கு முன்னதாகவே வந்து அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி வரும் போது அனைத்து அதிமுக உறுப்பினர்களும் மேஜையை தட்டி எழுந்து நின்றபோதும். செங்கோட்டையன் கண்டுக்கொள்ளாமல் அவரது இருக்கையிலேயே அமர்ந்திருந்தார்.
* துரைமுருகனிடம் நலம் விசாரித்த எடப்பாடி
தமிழக சட்டமன்றம் நீண்ட நாட்களுக்கு பின்பு நேற்று கூடியது. அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டு ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். முதல்வர், துணை முதல்வர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிக அளவில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டம் முடிந்தவுடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் சென்று நலம் விசாரித்தார். அதை போல் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுடன் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் திமுக அதிமுகவினர் அருகே வந்து பேசினர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடனும் சில அதிமுக உறுப்பினர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
* எடப்பாடி கூட்டம் புறக்கணிப்பு
சட்டப்பேரவை முடிந்ததும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அறையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், நாளை (இன்று) முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் எப்படி செயல்பட வேண்டும், என்னென்ன பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் பங்கேற்காமல், புறக்கணித்தார்.
* பாமக தர்ணா போராட்டம்
பாமக சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக ஜி.கே.மணி இருந்து வரும் நிலையில் அவரை மாற்றக்கோரி அன்புமணி தரப்பு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே கடிதம் கொடுத்திருந்தனர். இந்த கடிதத்தின்படி பாமக சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக ஜி.கே.மணியை அப்பொறுப்பில் இருந்து அவரை நீக்க வேண்டும் என கூறி அன்புமணி ஆதரவு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேஸ்வரன், சிவகுமார், சதாசிவம் ஆகியோர் நேற்று சட்டப்பேவை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்புமணி ஆதரவில் உள்ள தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் பாமக சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராகவும், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் பாமக கொறடாவாக நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரவை துளிகள்
* காலை 9.30 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல்நாள் அலுவல் 9.42 மணிக்கு நிறைவடைந்தது.
* வழக்கமான பாதையை பயன்படுத்தாமல் சபாநாயகர் அறை வழியாக சட்டமன்றத்திற்குள் சென்றார் செங்கோட்டையன்.
* முன்னாள் முதலல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையின் முதல்நாள் நிகழ்வில் பங்கேற்கவில்லை.
* சட்டப்பேரவை வளாகத்தில் துரைமுருகனை தனியாக சந்தித்து அவரின் உடல்நிலை குறித்து எடப்பாடி பழனிசாமி விசாரித்தார்.
* பாமக சட்டமன்றக குழு தலைவர் ஜி.கே.மணியை மாற்றக்கோரி, அன்புமணி தரப்பு எம்.எல்,ஏக்கள் மனு அளித்த நிலையில் அவருக்கான இருக்கையிலேயே ஜிகே.மணி அமர்ந்திருந்தார்.
* ராமதாஸ் ஆதரவு பெற்ற பாமக சட்டமன்ற குழுத்தலைவர் ஜி.கே.மணியை மாற்றக் கோரி அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் தலைமை செயலக வளாகத்தில் சிறிது நேரம் தர்ணாவில் ஈடுபட்டனர்.
* உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது அவர்களது புகைப்படங்கள் முதன்முறையாக சட்டப்பேரவையில் உள்ள திரையில் காண்பிக்கப்பட்டது.
* சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க அரை மணி நேரத்திற்கு முன்பாகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்திருந்தார்.