திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கிடும் வகையில் தூய்மை தமிழ்நாடு - சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்தது
சென்னை: தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகளில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் தினந்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் தூய்மை இயக்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தை செயல்படுத்திட தூய்மை தமிழ்நாடு நிறுவனம் என்ற அமைப்பு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தூய்மை இயக்கத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மாநிலத்திற்கான நிலையான கழிவு மேலாண்மை தீர்வுகளுக்கான நடிவடிக்கைகளை தூய்மை தமிழ்நாடு நிறுவனம் செய்து
வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தூய்மை தமிழ்நாடு நிறுவனம் மாநிலம் முழுவதும் உருவாகும் திடக்கழிவுகளை அறிவியல் பூர்வமாக அதிநவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி சரியான முறையில் கையாளவும், அவற்றை மறுசுழற்சி செய்யவும் ஒரு வலுவான ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்க சென்னை - இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் (ஐஐடி) இணைந்து செயல்பட உள்ளது. இதற்காக, தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சென்னை-இந்திய தொழில்நுட்ப நிறுவன இயக்குநருடன் புரிந்துனர்வு ஒப்பந்தம் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
ஐக்கிய நாடுகளின் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கும், மாநிலத்தில் திடக்கழிவு மேலாண்மையில் எதிர்கொள்ளப்பட்டு வரும் சவால்களை களைந்திட உயர் தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டு மீள்பயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்திடும். இந்த நிகழ்வின்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச்செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.


