சென்னை: விருதுநகர் ஜவுளி பூங்கா உட்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.437 கோடியில் தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. விருதுநகர் மாவட்டம், குமாரலிங்கபுரத்தில் சுமார் 1,052 ஏக்கர் நிலத்தில் பி.எம்.மித்ரா எனப்படும் பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்தப் பூங்கா அமைப்பதற்கு கடந்த 2023 ஆண்டு பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜவுளி பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. அதன்படி, சிப்காட் நிறுவனம் சார்பில் சுமார் 1,052 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்தத் திட்டமானது மத்திய, மாநில அரசுகள் சார்பில் செயல்படுத்தப்படுகின்றன. இந்த ஜவுளி பூங்காவில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடியில் உள் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில், மத்திய அரசு ரூ.1894 கோடியை ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டமானது, பி.எம்.மெகா இண்டர் கிரேடட் டெக்ஸ்டைல்ஸ் ரீஜன்ஸ் அண்ட் அப்பேரல் பார்க் என்ற அமைப்பு மற்றும் தமிழக அரசின் சிறப்பு முகமை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.சிப்காட் நிறுவனமானது தனது சார்பில் ஜவுளி பூங்கா அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், இதையடுத்து, விருதுநகர் இ.குமாரலிங்கபுரத்தில், பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்கா அமைக்க, முதல் கட்டமாக, 437 கோடி ரூபாய் செலவில், கழிவுநீர் வெளியேற்றும் பணி, தண்ணீர் வினியோகம், மழைநீர் வடிகால் கால்வாய்களுடன் கூடிய சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, தமிழக அரசின் 'சிப்காட்' நிறுவனம் நேற்று, 'டெண்டர்' கோரி உள்ளது.