Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழக மீனவர்கள் பிரச்னைகளை தீர்க்க இந்தியா வந்த இலங்கை பிரதமரிடம் மோடி விவாதிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழக மீனவர்கள், மீன்பிடி படகுகளை விடுக்கவும், இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை பிரதமரிடம் விவாதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: இலங்கை பிரதமர் மூன்று நாள் பயணமாக டெல்லி வந்துள்ளார்.

இந்த பயணம், பாக் விரிகுடாவின் பாரம்பரிய மீன்பிடி கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பிரச்னைகளை தீர்க்க ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள், துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக தமிழக மீனவ சமூகங்கள் தொடர்ந்து துன்பங்களை எதிர்கொள்கின்றனர். 2021 முதல் 106 வெவ்வேறு சம்பவங்களில் 1,482 மீனவர்களும், 198 மீன்பிடி படகுகளும் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மீனவர்கள் பெரும் துயரத்தையும், பொருளாதார இழப்பையும் எதிர்கொண்டுள்ளனர். இந்த பிரச்னைகளை தூதரக நடவடிக்கைகள் மூலம் தீர்க்க இந்திய அரசின் தலையீட்டை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரி வருகிறது. இதற்காக, தான் பதினொரு முறை பிரதமருக்கும், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு 72 முறையும் கடிதம் எழுதியுள்ளேன். இந்த சிறை பிடிப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், கீழ்கண்ட முக்கியமான பிரச்னைகள் குறித்து இலங்கை பிரதமரின் வருகையின் போது விவாதிக்கப்பட வேண்டும்.

அதன்படி, கச்சத்தீவு மீட்பு: தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவை சுற்றியுள்ள கடல் பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். இந்த தீவு ஒன்றிய அரசால் மாநில அரசின் முறையான ஒப்புதலை பெறாமல் இலங்கைக்கு மாற்றப்பட்டது. இந்த முடிவை 1974 முதல் தமிழ்நாடு சட்டமன்றம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதன் விளைவாக, நமது மீனவர்கள் இப்போது தங்கள் பாரம்பரிய மீன்பிடி தளங்களுக்குள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன், அத்துமீறி நுழைவதாக கூறி அடிக்கடி துன்புறுத்தப்படுகின்றனர்.

இந்த சூழ்நிலையில், கச்சத்தீவை மீட்பதற்கும், பாக் விரிகுடா பகுதியில் உள்ள நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பதற்கும், இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திட இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மீனவ சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால மற்றும் துயரமான பிரச்னைகளைத் தீர்க்க இது மிகவும் முக்கியமானதுமாகும்.

மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவித்தல்: தற்போது, ​​தமிழ்நாட்டை சேர்ந்த 76 மீனவர்களும், 242 மீன்பிடி படகுகளும் இலங்கை வசம் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் துயரத்தை தணிக்க, அவர்களை விரைவாக தாயகம் திரும்பவும், அவர்களின் படகுகளை இலங்கை அரசிடம் இருந்து விடுவிக்கவும் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கடலில் வன்முறை மற்றும் திருட்டு சம்பவங்களை தடுத்தல்:

இந்திய மீனவர்கள் தங்கள் மீன்பிடி உபகரணங்கள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்படுவதையும், இலங்கை நாட்டினரால் அடிக்கடி நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் திருட்டு சம்பவங்கள் குறித்தும் புகார் அளிப்பதாகவும், இந்த பிரச்னையை திறம்பட தீர்க்க மேம்படுத்தப்பட்ட இருதரப்பு பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மற்றும் நிலையான தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளை தேசியமயமாக்கியதன் தாக்கம்: இலங்கை மீன்பிடி சட்டத்தில் 2018ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தம், பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகுகளை தேசியமயமாக்க வழிவகுத்துள்ளால் அவற்றை மீட்டெடுப்பது சாத்தியமற்றதாகிவிட்டது. மீனவர்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாக பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இந்த பிரச்னையை இலங்கை பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.