Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 35 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

நாகப்பட்டினம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். மேலும் 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது நடுக்கடலில் எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், மீனவர்களை தாக்கி வலை, மீன்கள், மீன்பிடி உபகரணங்களை பறித்து விரட்டியடிப்பதும், துப்பாக்கி சூடு நடத்துவது, கம்பி, கட்ைட மற்றும் ஆயுதங்களால் மீனவர்கள் தாக்கப்படுவதும் தொடர் கதையாக உள்ளது.

இந்நிலையில், நாகப்பட்டினம் நம்பியார் நகரை சேர்ந்த பாரிக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த பாண்டியன்(45), உதயகுமார்(40), ஆகாஷ்(25), சுபாஷ்(35), மணிமாறன்(38), விக்கி(25), முருகவேல்(38), சேத்தான்(19), ஹரன்(25), ஜியோ(45) ஆகிய 10 பேர் கடந்த 30ம்தேதி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் கோடியக்கரைக்கு தென்கரையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 10 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்து விசைப்படகை பறிமுதல் செய்தனர். இதேபோல் நாகப்பட்டினம் அக்கரைபேட்டை வடக்கு தெருவை சேர்ந்த ராஜாவுக்கு (54) சொந்தமான விசைப்படகில் சென்ற ராஜா உள்பட 10 மீனவர்களை கைது செய்து விசைப்படகை பறிமுதல் செய்தனர். மேலும், நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த ஆனந்தகுமார் (42) உள்ளிட்ட 11 பேரையும் கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது விசைப்படகை பறிமுதல் செய்தனர்.

அதேபோல, ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளை கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் படகில் நம்புதாளை கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான படகில் பாலமுருகன்(30), தினேஷ்(18), குணசேகரன்(42), ராமு(22) ஆகியோர், கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலை மீன் பிடித்து கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், 4 மீனவர்களை கைது செய்து, படகை பறிமுதல் செய்தனர். காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 35 மீனவர்களும் அங்கிருந்து இலங்கை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீன்வளத்துறை அதிகாரிகள், 35 பேரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.