Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகத்தின் வளர்ச்சியை பின்நோக்கி இழுக்க முயற்சிக்கும் கூட்டத்தின் மலிவான அரசியலை 2026ல் வீழ்த்துவோம்: கிருஷ்ணகிரியில் 1,114 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 1,114 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். விழாவில், 85 ஆயிரம் பேருக்கு முதல்வர் இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். இந்த விழா குறித்த தனது எக்ஸ் தள பதிவில் தமிழக வளர்ச்சியை பின்நோக்கி இழுக்க முயற்சிக்கும் கூட்டத்தின் மலிவான அரசியலை 2026ல் வீழ்த்துவோம் என்று உறுதிபட தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா, முடிவுற்ற திட்டப்பணிகள் துவக்க விழா, 2.23 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று, கிருஷ்ணகிரி- சென்னை சாலையில் உள்ள அரசு ஆடவர் கலைக்கல்லூரி வளாகத்தில் நடந்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, ரூ.270.75 கோடியில் முடிக்கப்பட்ட 193 பணிகளை துவக்கி வைத்து, ரூ.562.14 கோடி மதிப்பிலான 1,114 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து 2,23,013 பயனாளிகளுக்கு ரூ.2,052 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கிருஷ்ணகிரிக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு மாவட்டத்தையும் பார்த்துப் பார்த்து வளர்த்து வருகிறோம். ஒவ்வொரு தனிமனிதரின் கோரிக்கையையும் நிறைவேற்றி தருகிறோம். அதனால் தான், மக்களிடம் திமுக அரசுக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் நியாயமாக 10 மணிக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும்.

ஆனால், வரும் வழியெல்லாம் ஆங்காங்கே இருக்கக்கூடிய பெண்கள், இளைஞர்கள், ஆண்கள், முதியவர்கள், விவசாய பெருங்குடி மக்கள் ஆகியோர் சாலையின் இருபுறத்திலும் நின்று எங்களை வரவேற்று, மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்கள். அதையெல்லாம் முடித்துவிட்டு, இங்கு வந்து சேருவதற்கு தாமதமாகிவிட்டது. தாமதமாக வந்த காரணத்தால் முதலில் உங்களிடத்தில் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திராவிட மாடல் ஆட்சியின் மீது, அதைப் பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருக்கக்கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாக இருக்கக்கூடிய என் மீது அவர்கள் காட்டக்கூடிய பாசம், அன்பு தான் இன்றைக்கு இங்கு வந்து சேருவதற்கு இவ்வளவு தாமதம் நேர்ந்திருக்கிறது. இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத எதிர்க்கட்சியினர், ஆக்கப்பூர்வமான எந்த விமர்சனத்தையும் வைக்க முடியாமல், வயிற்றெரிச்சல் காரணமாக, திமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

`பொய் சொன்னாலும், பொருத்தமாக சொல்லுங்கள்’ என்று ஒரு பழமொழி உண்டு. அதுதான் என்னுடைய நினைவிற்கு வருகிறது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு, நாங்கள் கொடுத்திருக்கக்கூடிய வாக்குறுதிகள் மட்டுமல்ல, சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம். காலை உணவுத்திட்டம் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டதா?, புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 போன்ற பல திட்டங்களை தேர்தல் அறிக்கையில் சொல்லாமலேயே செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

நம்முடைய அரசு எப்படி இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக செயல்படுகிறது என்று ஏராளமான கட்டுரைகளை பத்திரிகைகள் வெளியிடுகிறது. செய்திகளில் சொல்கின்றனர். இன்னும் சொல்லவேண்டும் என்றால், ஏராளமான வட இந்திய யூ டியூப் சேனல்கள் கூட ஆய்வு செய்து, திராவிட மாடலை பற்றி அவர்கள் மாநில மக்களுக்கு எடுத்து சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இது எதுவுமே சிலருக்குத் தெரியவில்லை. தெரியவில்லை என்று சொல்வதைவிட, தெரிந்தும், மறைக்க விரும்புகின்றனர்.

பொய்களை பரப்புவதும், களங்கம் கற்பிப்பதும் தான் காலங்காலமாக அவர்களுடைய அரசியல். கொள்கையற்ற அந்தக் கூட்டத்திற்கு அதைத் தாண்டி ஒன்றும் தெரியாது. மலிவான அரசியல் செய்கின்ற அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றாலும், வாக்களித்த மக்களான உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் எங்களுக்கு உண்டு. அதை நான் உணர்கிறேன்.

அதனால்தான், நம்முடைய அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி.செழியன், எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகிய 3 பேரும் ஊடகங்கள் முன்னால், திமுக நிறைவேற்றிய வாக்குறுதிகளை சொன்னார்கள். திமுக வழங்கிய 505 தேர்தல் வாக்குறுதிகளில், 364 நிறைவேற்றி செயல்பாட்டில் இருக்கிறது. 40 அறிவிப்புகள் அரசின் பரிசீலனையில் இருக்கிறது. அந்த வகையில், மொத்தம் 404 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது இல்லாமல், ஒன்றிய அரசின் பரிசீலனைக்காக நிலுவையில் இருப்பது 37 திட்டங்கள்.

64 திட்டங்கள் இப்போதைக்கு நிதியின் காரணமாக எடுத்துக் கொள்ள இயலாத திட்டங்களாக இருக்கிறது என்று துறைவாரியாக பிரித்து, தெளிவாக மக்களுக்கு விளக்கிச் சொன்னார்கள். ஆனால், நல்லதை எல்லாம் பார்க்க மாட்டேன், நல்லதைக் கேட்க மாட்டேன், உண்மையை பேச மாட்டேன் என்று முடிவுடன் இருக்கின்ற எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு வழக்கம்போல் இதெல்லாம் தெரியவில்லை. பொய்களை வைத்து கருத்துருவாக்கம் செய்யலாம் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், என்றைக்கும் உண்மைக்கு தான் வலிமை அதிகம்.

நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில், நீட் விலக்கு போன்ற வாக்குறுதிகளை இப்போதைக்கு எங்களால் நிறைவேற்ற முடியவில்லை. நாங்கள் மறுக்கலையே. நன்றாக கவனியுங்கள், இப்போதைக்கு நிறைவேற்ற முடியவில்லை. அதற்காக நாங்கள் முயற்சி செய்யாமல் இருக்கிறோமா?. ஆட்சி பொறுப்பிற்கு வந்தவுடன் நீட் விலக்குக்கு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி அனுப்பினோம்.

அதை என்ன மாதிரியான சூழ்ச்சிகளை எல்லாம் செய்து ஆளுநர் மூலமாக தடுத்தார்கள். இது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். அப்போதும் கடுமையான சட்டப் போராட்டம் நடத்தினோம். அதிமுக ஆட்சியில் இருந்தபோது அதை மறைத்து வைத்ததுபோல், நாடகம் ஆடவில்லையே. நாடாளுமன்ற தேர்தல் வந்ததும், ஒன்றியத்தில் நமக்கு ஆதரவான அரசு அமையும் என்ற நம்பிக்கையுடன் தமிழ்நாட்டின் உணர்வை எடுத்துரைத்து போராடினோம். புரிந்துகொண்டு, இந்தியாவின் இளந்தலைவராக இருக்கக்கூடிய ராகுல்காந்தியும் தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

நாட்டு மக்களுக்கு எதிரான பாஜ ஆட்சி நெடுநாள் நீடிக்காது. நான் உறுதியாக சொல்கிறேன் நிச்சயம் ஒருநாள் நம்முடைய மாநிலத்திற்கான உரிமைகளை காக்கும் ஆட்சி அமையத்தான் போகிறது. வெளிநாட்டு பயணங்களைப் பற்றியும், முதலீடுகளை பற்றியும் விமர்சிக்கிறார் பழனிசாமி. தமிழ்நாட்டை விட்டு தொழில் நிறுவனங்கள் ஓடிப்போக காரணமாக இருந்தவர் அந்த பழனிசாமி. திராவிட மாடல் ஆட்சியில் எவ்வளவு முதலீடுகள் வந்திருக்கிறது, எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று தெளிவாக சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம்.

இது எதுவும் அவர் காதில் விழவில்லை. 10 ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளில் நிறைவேற்றிய வாக்குறுதிகள் என்னவென்று அவரால் பட்டியலிட்டு சொல்ல முடியுமா?. அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலம் சீர்கெட்ட நிர்வாகத்தில், தொழில் முதலீட்டாளர்கள் தலைதெறிக்க அண்டை மாநிலங்களுக்கு ஓடினார்களே, மறக்க முடியுமா?. அந்த நிலைமையை அப்படியே தலைகீழாக நாம் மாற்றி இருக்கிறோம்.

பழனிசாமியும் தன்னுடைய ஆட்சிக்காலத்தில், முதலீட்டாளர் மாநாடு நடத்தினார். ஒப்பந்தமும் கையெழுத்தானதாக சொன்னார்கள். அதில் பாதி கூட வரவில்லையே?. அவரும் வெளிநாடு சென்றார். முதலீடுகளை ஈர்த்துவிட்டோம் என்று சொன்னார். ஆனால் கையெழுத்தாகி இருப்பதில், கால்வாசி கூட செயல்பாட்டிற்கு வரவில்லையே?. ஆனால், நாம் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிநாடுகளுக்குச் சென்று ஒப்பந்தமிட்டதில், 77 சதவீத நிறுவனங்கள் வந்திருக்கிறது. மீதமுள்ளவையும் தொடங்கக்கூடிய பணியில் இருக்கிறது.

நான் உறுதியோடு சொல்கிறேன், தமிழ்நாட்டை. இந்திய அளவில் இல்லை, தெற்காசியாவில் முன்னேறிய மாநிலமாக நிச்சயம் உருவாக்கிக் காட்டுவேன். இதுதான் என்னுடைய உறுதி. அவதூறுகள், பொய்கள், வீண்பழிகள், இதை பற்றியெல்லாம் கவலைப்படக்கூடியவன் நான் அல்ல. 50 வருடங்களாக அதையெல்லாம் பார்த்த பிறகு தான், இன்றைக்கு இந்த இடத்தில் உங்கள் முன்னால் நிற்கிறேன். 2026 தேர்தலிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

அடுத்து நம்முடைய திராவிட மாடல் ஆட்சி தான். மக்கள் தயாராக இருக்கிறார்கள். திமுகவின் மக்களாட்சி காலமெல்லாம் தொடரும். தமிழ்நாடு மென்மேலும் வளரும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சொல்லும் நல்லெண்ணமும் செயலாகி - அதன் பயன் ஒவ்வொருவரையும் சென்றடைகிறது.

இதுதான். கிருஷ்ணகிரியில் ரூ.2884.93 கோடி செலவிலான 193 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 1114 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,23,013 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். அவதூறுகளால் களங்கம் விளைவித்திட முடியுமா - பொய்களால் காரிருளை விளைவித்திட முடியுமா? தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பின்னோக்கி இழுக்க முடியுமா என்றெண்ணும் கூட்டத்தின் மலிவான அரசியலை எப்போதும்போல் 2026லும் வீழ்த்துவோம்! நம்பர் 1 தமிழ்நாடு எனத் தலைநிமிர்வோம்!’ என்று பதிவிட்டுள்ளார்.

* 85,711 பேருக்கு இலவச பட்டா வழங்கி சாதனை

முதல்வர் மு.க..ஸ்டாலின் பேசுகையில், ‘‘இந்த அரசு நிகழ்ச்சியில் இதுவரை நடக்காத அளவுக்கு, ரூ.1,212 கோடி மதிப்பில் 85,711 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது. நகர பகுதிகளில், 5 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரக்கூடிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் பணியை நமது அரசு வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது.

இதற்கு முன்பு ஊரக பகுதிகளில் மட்டும்தான், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அந்த உரிமையை, நகரப் பகுதி மக்களுக்கும் வழங்கி, வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு. ஆயிரக்கணக்கான மக்களின் நீண்டநாள் கனவை நிறைவேற்றியுள்ளோம்’’ என்றார்.

* 3 கிலோ மீட்டர் ரோடு ஷோ முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்

கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை ரோடு மேம்பாலத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தினார். இந்த ரோடு ஷோ, ராயக்கோட்டை மேம்பாலம், அண்ணா சிலை, பெங்களூர் சாலை வழியாக ஆர்.சி.பள்ளி, மாவட்ட திமுக அலுவலகம் வழியாக 5 ரோடு ரவுண்டானாவை வந்தடைந்தது. அங்கிருந்து சென்னை சாலை, பெரிய மாரியம்மன் கோயில் வழியாக மொத்தம் 3 கி.மீ. தூரம் நடந்து சென்ற முதல்வர், சென்னை பைபாஸ் ரோடு வரை பொதுமக்களை சந்தித்தார்.

அப்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் ஏராளமானோர் சாலையின் இருபுறம் நின்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பொது மக்கள் கோரிக்கை மனுக்களை முதல்வரிடம் வழங்கினர். இதையடுத்து பெண்கள், மாணவிகள் என பலரும் முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து விழா நடக்கும் இடத்திற்கு செல்ல 12க்கும் மேற்பட்ட இடங்களில் மேள தாளம் முழங்க முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.