தமிழ்நாடு முழுவதும் வெளியில் தெரியாமல் இருக்கக்கூடிய விளையாட்டு வீரர்கள் திறமையை வெளிக்கொண்டு வருவது தான் லட்சியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025க்கான பரிசளிப்பு விழாவில் பேசியதாவது: முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரும் விளையாட்டுப் புரட்சியை, ஒரு மாபெரும் இயக்கமாகவே மாற்றிக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்தப் போட்டியை சிறப்பாக நடத்த வேண்டும் என்று முதல்வர் ரூ.84 கோடியை ஒதுக்கி கொடுத்தார்.
பரிசுத் தொகையாக ரூ.37 கோடி ஒதுக்கி கொடுத்தார். அதற்கு விளையாட்டு வீரர்களின் சார்பாக, துறையின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 2023ம் ஆண்டு, இதே முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 4 லட்சம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றார்கள். ஆனால், இன்றைக்கு 2025ம் ஆண்டு சுமார் 16 லட்சம் இளைஞர்கள் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்கள். இதிலிருந்து இந்தப் போட்டிகளுக்கான வரவேற்பையும், எதிர்பார்ப்பையும், நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்ற நோக்கமே, தமிழ்நாடு முழுவதும் வெளியில் தெரியாமல் இருக்கக்கூடிய விளையாட்டு வீரர்களின் திறமையை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே லட்சியம். பயிற்சியும், மன உறுதி இருந்தால், நீங்கள் நிச்சயம் சாதித்து காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை இந்த அரசுக்கு இருக்கின்றது. உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முதல்வர் தயாராக இருக்கின்றார்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.