Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழ்நாடு 55.3% பெற்று உச்சம்: மற்ற மாநிலங்களை பின்னுக்கு தள்ளி சாதனை: மாநில எரிசக்தி திறன் குறியீடு அமைப்பு அறிவிப்பு

சென்னை: எரிசக்தி திறனில் இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக மாநில எரிசக்தி திறன் குறியீடு அமைப்பு தெரிவித்துள்ளது. தொழில் துறை எரிசக்தி திறனில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு 55.3 சதவீதம் பெற்று உச்சத்தை தொட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இந்தியாவில் தமிழ்நாடு நம்பர் 1 மாநிலம் எனும் இலக்கை அடைந்திடும் நோக்கில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள்.

அதன் பயனாக, தமிழ்நாடு ஒவ்வொரு துறையிலும் அபரிமிதமான வளர்ச்சி கண்டு, இந்தியாவில் முன்னணி மாநிலமாக சிறந்து விளங்குகிறது. இதனை ஒன்றிய அரசினுடைய ஆய்வறிக்கைகள் அவ்வப்பொழுது வெளியிட்டு வருகின்றன. செய்தி ஊடகங்களும், செய்தி ஏடுகளும் கூட இந்த உண்மையை வெளிப்படுத்தி தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டின் தன்னிகரில்லா முதலமைச்சரை பாராட்டி வருகின்றன.

அந்த வகையில், தொழில்துறை எரிசக்தித் திறனில் தமிழ்நாடு இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் என திகழ்வதாக மாநில எரிசக்தி திறன் குறியீடு அமைப்பு தெரிவித்துள்ளது. தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழ்நாடு தேசிய அளவில் உச்சம் பெற்று மாநில ஆற்றல் திறன் குறியீடு 2024ன் குழு 1ல் 55.3 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஆந்திர பிரதேசம் அளவீட்டுக் குறியீடுகளின்படி, நாட்டின் மிக உயர்ந்த முன்னேற்றத்தைப் பதிவு செய்து, 27.5 சதவீத முன்னேற்றத்தைப் பதிவு செய்து, இரண்டாம் குழுவில் முன்னிலை வகிக்கிறது. 23.1 சதவீதம் வளர்ச்சி பெற்று ஒடிசா 28.8 சதவீதம் வளர்ச்சி பெற்று சட்டீஸ்கர் 16.5 சதவீதம் வளர்ச்சி பெற்று மத்தியபிரதேசம் 10.9 சதவீதம் வளர்ச்சி பெற்று, திரிபுரா உள்ளிட்ட பல மாநிலங்களும் வலுவான முன்னேற்றத்தைப் படைத்துள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தன்மையுடன் கூடிய முயற்சிகளின் பயனாக குழு 1ல் உள்ள தமிழ்நாடு, கட்டுமானத் துறையில் ஆற்றல் திறன் முயற்சிகளை ஊக்குவிப்பதிலும், செயல்படுத்துவதிலும் முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளது. மேலும், அதிக எண்ணிக்கையிலான சான்றளிக்கப்பட்ட பசுமை கட்டிடங்களைக் கொண்ட முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

தமிழ்நாட்டின் பீஸ் (PEACE) திட்டம் வாயிலாக 2023-24ம் ஆண்டில் விழிப்புணர்வு, பயிற்சி, எரிசக்தி தணிக்கை மானியங்கள் ஆகியவற்றுடன் செயல்படுத்தல் முயற்சிகளுக்காக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான ஆற்றல் திறன்களுக்காக மொத்தம் ரூ.2.6 கோடி முதலீடு செய்து ஊக்கப்படுத்தியுள்ளது. எரிசக்தி பாதுகாப்பு முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக, 25 மாநிலங்கள் எரிசக்தி பாதுகாப்பு விருதுகளை பெற்றுள்ளன. விருதுகளின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஒடிசா ஆகியவை முன்னணியில் உள்ளன. அடுத்த நிலையில் குஜராத் இடம் பெற்றுள்ளது.