கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெறுகிறது.
சென்னை: கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு நிகழ்ச்சி இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பங்கேற்கிறார்.
இதில், தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள், சிறப்புகள் குறித்த கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. நான் முதல்வன், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்ட பயனாளிகள், விளையாட்டு சாதனையாளர்கள், சிறப்பு குழந்தை சாதனையாளர்கள் பங்கேற்று, தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கு நடப்பாண்டு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியில், அத்திட்டங்களின் விரிவாக்கமும் நடைபெற உள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.