Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மனித வளங்களை வளர்ப்பதில் மகாராஷ்டிரா, குஜராத்தை விட தமிழ்நாடு மாபெரும் சாதனை: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: மனித வளங்களை வளர்ப்பதில் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை விட தமிழ்நாடு மாபெரும் சாதனை படைத்துள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: பொருளாதாரத்திலும் தொழில் வளர்ச்சியிலும் பல ஆண்டுகளாக முன்னிலையில் இருந்து வரும் குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை விட தமிழ்நாடு சிறுகுறு நடுத்தர தொழில்கள் மூலம் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கி மாபெரும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் 2023-24ம் ஆண்டுக்கான வளர்ச்சி குறித்த ஆய்வேட்டில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 39,699 சிறுகுறு தொழில்கள் உள்ளன. இவை 4,81,807 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு 8,42,720 மனித உழைப்பு நாட்களை கொண்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 26,446 தொழிற்சாலைகள் உள்ளன. 6,45,222 தொழிலாளிகள் உள்ளனர். இம்மாநிலம் 7,29,123 மனித உழைப்பு நாட்களை கொண்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் 31,031 தொழிற்சாலைகள் உள்ளன. 5,28,200 தொழிலாளர்கள் உள்ளனர். இம்மாநிலம் 7,21,586 மனித உழைப்பு நாட்களைக் கொண்டுள்ளது. தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குதல் அதிகளவில் உற்பத்திகள் செய்தல் ஆகியவற்றில் மனித உழைப்பு நாட்களில் குஜராத் மகாராஷ்டிர மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என்பதை இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

கோவிட் காலத்தில் தொழில்களும் வேலை வாய்ப்புகளும் குறைந்த நிலையை இந்த திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பின் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு சீர்படுத்தி வளர்ச்சியில் இன்று நல்ல முன்னேற்ற நிலையை அடைந்துள்ளது. இந்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் தமிழ்நாடு 8,42,720 மனித உழைப்பு நாட்களை கொண்டு தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதில் இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு ஒரு தொழிலாளிக்கு சராசரியாக 1.75 மனித உழைப்பு நாட்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மகாராஷ்டிரா ஒரு தொழிலாளிக்கு 1.13 மனித உழைப்பு நாட்களுக்கும், குஜராத் ஒரு தொழிலாளிக்கு 1.37 மனித உழைப்பு நாட்களுக்கும் மட்டுமே வேலைவாய்ப்புகளை அளிக்கின்றன. இந்த புள்ளி விவரங்கள் மற்ற இரண்டு மாநிலங்களை விட தமிழ்நாடு வேலைவாய்ப்புகளை அதிகரித்து உழைப்பாளிகளை தகுந்த முறையில் பயன்படுத்தியுள்ளது என்ற உண்மையை புலப்படுத்துகின்றன. அதேபோல பெரிய மாநிலங்களான உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் மனித உழைப்பு நாட்கள், தொழிலாளிகள் இடையே பெரிய வேறுபாடு காணப்படுவதாகவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.