சென்னை: தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வித பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு 2022ம் ஆண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர். அதன்படி நடப்பாண்டுக்கான திறனாய்வுத் தேர்வு கடந்த அக்டோபர் 11ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 2.57 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதன் முடிவுகளை தேர்வுத்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா, வெளியிட்ட அறிவிப்பில், ‘‘நடத்தி முடிக்கப்பட்ட தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களை dgedsection@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு நாளை மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்’’என கூறப்பட்டுள்ளது.
+
Advertisement


