Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் தமிழும் - ஆங்கிலமும் என்ற இருமொழி கொள்கையே நம் உறுதியான கொள்கை: மாநில கல்வி கொள்கையை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், “தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 - பள்ளிக் கல்வி”-யினை வெளியிட்டு, முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி அடைந்த அரசு பள்ளி மாணவர்களில், உயர்கல்வியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 75 விழுக்காடு. இந்த நம்பரை அடுத்த ஆண்டு இன்னும் அதிகமாகும் அளவுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, அச்சப்படாதீர்கள்! தயங்காதீர்கள்! காடு எதுவாக இருந்தாலும், சிங்கம் தான் அங்கு ராஜா. அதுபோன்று, எளிய பின்னணியில் இருந்து பெரிய உயரத்திற்கு முயற்சியால் வந்திருக்கக்கூடிய நீங்கள்தான் அங்கே உண்மையான ஹீரோ.

இந்த பெருமைமிகு விழாவில் தமிழ்நாட்டின் மாநில பள்ளி கல்விக் கொள்கை 2025-ஐ வெளியிட்டது பெருமகிழ்ச்சி. எதிர்காலத்திற்கு தேவையான தொலைநோக்கு பார்வையோடு இந்த கல்வி கொள்கையை உருவாக்கியிருக்கிறோம். இதில் ஹைலைட் ஆக சில பாயிண்டுகளை சொல்ல விரும்புகிறேன். இந்த கல்விக் கொள்கை மூலமாக, படித்து, மனப்பாடம் செய்வதைவிட சிந்தித்து, கேள்வி கேட்கின்ற மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம்.

எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான ஆற்றலை வழங்க இருக்கிறோம். தொழில்நுட்ப மனம் படைத்தவர்களாக மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம். படிப்பவர்களாக மட்டுமல்ல, படைப்பாற்றல் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம். கல்வியோடு உடற்பயிற்சியும் இணைக்கப்படும். தாய்மொழி தமிழ் நம்முடைய அடையாளமாக - பெருமிதமாக இருக்கும். முக்கியமாக தமிழும் - ஆங்கிலமும் என்கிற இருமொழிக் கொள்கைதான் நம்முடைய உறுதியான கொள்கையாக இருக்கும்.

மீண்டும் சொல்கிறேன், இருமொழிக் கொள்கைதான் நம்முடைய உறுதியான கொள்கை. ஒவ்வொரு ஒன்றியத்திலும், புதிய மாதிரி வெற்றிப் பள்ளிகள் அமைக்கப்படும். உண்டு உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்படும். கல்வித் தொலைக்காட்சியும், மணற்கேணி செயலியும் ‘ஒவ்வொரு வீடும் ஒரு வகுப்பறை’ என்ற நிலையை உருவாக்கும். மதிப்பெண்களாக இல்லாமல் - மதிப்பீடுகளை நோக்கிய பயணமாக, தேர்வு முறை அமையும். பசுமைப் பள்ளிகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.

நான் முதல்வன் திட்டம் வேலைக்கு வழிகாட்டுவதாக மட்டுமல்லாமல், வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக அமையும். இப்படி, கல்வித் துறையில் மாபெரும் மாற்றத்தை கொண்டுவர இருக்கிறோம். ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், ‘அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்தரக் கல்வி’! இதுதான், நம்முடைய திராவிட மாடல் அரசின் கல்விக் கொள்கை. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, கோவி.செழியன், மேயர் பிரியா, தலைமை செயலாளர் முருகானந்தம், தாய்பே வர்த்தக மற்றும் கலாச்சார மையத்தின் தலைமை இயக்குநர் ஸ்டீபன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்தரமோகன், மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் சுதன், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

* அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு சிந்தனைகள் பள்ளிகளில் நுழையாது

பள்ளிகள் எல்லோருக்குமானது, அங்கு யாருக்கும் தடை இல்லை, தடுக்கப்படவும் விடமாட்டோம். யாரும் புறக்கணிக்கப்படக் கூடாது. கல்வி பாகுபாட்டை நீக்குவோம். நீங்கள் விரும்புகின்ற கல்வியை பெறுவதற்கான வாசலை, நம்முடைய கல்விக் கொள்கை திறந்து வைக்கும். கல்வி சமத்துவத்தை உருவாக்குவோம். அறிவுக் கல்வியை அறிமுகம் செய்வோம். முக்கியமாக அது பகுத்தறிவு கல்வியாக இருக்கும்.

அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு சிந்தனைகள் பள்ளிகளில் நுழைய அனுமதிக்க மாட்டோம். நம்முடைய மாணவர்கள் உலகளவில் போட்டி போட்டு, வெற்றி பெற இந்த மாநில கல்விக் கொள்கை துணையாக இருக்கும். மொத்தத்தில், கல்வியில் முன்னணி மாநிலமாக இருக்கின்ற தமிழ்நாட்டை மேலும் முன்னேற்றுவோம்.

கல்வி மூலமாக, எதிர்காலத்தில் நீங்கள் எல்லோரும் பெரிய பெரிய அதிகாரிகளாக, அரசியல் தலைவர்களாக, அறிவியலாளர்களாக, மருத்துவர்களாக, சட்ட அறிஞர்களாக, பொறியாளர்களாக, கலைஞர்களாக உருவாகி உங்கள் வீட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இதுபோன்ற இன்னொரு மேடையில், உங்களை எடுத்துக்காட்டாகச் சொல்லி, மற்றவர்களை ஊக்கப்படுத்தும் அளவுக்கு நீங்களும் உயர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.