சேலம்: தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே 86% நீர்நிலைகள் முழு கொள்ளளவு எட்டி நிரம்பி இருப்பதால் விவசாய்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை காலத்திலேயே மாநிலத்தின் பல்வேறு பகுதியில் நல்ல மழை பெய்தது. இதனால், மாநிலத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வேகமாக நிரம்பின. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் மேட்டூர் அணை நடப்பாண்டில் 7வது முறையாக நிரம்பியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 86% நீர்நிலைகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளன.
மேலும் பல நீர்நிலைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. மேட்டூர் அணை 100% அளவுக்கும், பவானிசாகர் அணை 80.8% அளவுக்கும், அமராவதி அணை 96.1% அளவுக்கும், வைகை அணை 89.8% அளவுக்கும் தண்ணீர் நிரம்பியுள்ளன. பேச்சிப்பாறை அணை 75% அளவுக்கும், கிருஷ்ணகிரி அணை 87.5% அளவுக்கும், சாத்தனுர் அணை 82.4% அளவுக்கும், சோலையாறு அணை 97.7% அளவுக்கும், பரம்பிக்குளம் அணை 99.6% அளவுக்கும், ஆழியாறு அணையில் 98.6% அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. அவ்வப்போது பெய்யும் மழை மற்றும் வடகிழக்கு பருவமழையால் அணைகளுக்கு தண்ணீர்வரத்து மேலும் அதிகரிக்கும். இதனால் தமிழ்நாட்டில் அணைத்து நீர்நிலைகளும் விரைவில் 100% தண்ணீர் இருப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உபரி நீரை கையாள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு தீவிரமாக எடுத்து வருகிறது.