Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டிலும் வாக்குத் திருட்டை நடத்த பாஜக சதி: அடுத்த 8 மாதங்களுக்கு விழிப்புடன் இருக்க பா.சிதம்பரம் அறிவுறுத்தல்

நெல்லை: பாஜகவின் சூழ்ச்சியால் பீகார், கர்நாடகாவை போன்று தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு நடைபெற வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான பா சிதம்பரம் எச்சரித்துள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வாக்கு திருட்டை தடுப்போம் ஜனநாயகத்தை காப்போம் என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சருமான பா.சிதம்பரம் கடந்த தேர்தல்களில் பல இடங்களில் தோல்வியை தழுவியதற்கு வாக்கு திருட்டே காரணம் என்று கூறினார்.

பீகார், கர்நாடகாவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் வாக்கு திருட்டு நடைபெற்றதற்கான ஆதாரங்களை ராகுல் வெளியிட உள்ளதாக கூறிய அவர் அந்த நிலை தமிழ்நாட்டிலும் நடைபெற கூடும் என்று எச்சரித்தார்.

அதற்கான சதி வேலையை பாஜக செய்து வருவதாகவும் பா.சிதம்பரம் குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டில் அடுத்த 8 மாத காலத்திற்கு இந்தியா கூட்டணி கட்சியினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பா.சிதம்பரம் கேட்டு கொண்டார். தொடர்ந்து பேசிய தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் அடுத்தகட்டமாக வாக்கு திருட்டுக்கு எதிராக 5 கோடி கையெழுத்து பெரும் இயக்கத்தை காங்கிரஸ் நடத்தி இருப்பதாக கூறினார். ஜனநாயகத்தை காப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது என்றும் அவர் பாராட்டினார். அடுத்து நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தமிழ்நாடு வர உள்ளதாக மாநாட்டில் பேசிய மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். இந்த மாநாட்டில் பாஜக முறைகேடுகளுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.