பழம்பெரும் இனிப்புக் கடையில் ராகுல் காந்தி ‘சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க... ஸ்வீட் ஆர்டர் எடுக்கணும்’: கடை உரிமையாளரின் கோரிக்கையால் கலகலப்பு
புதுடெல்லி: தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்புக் கடைக்குச் சென்ற ராகுல் காந்தியிடம், அவரது திருமணம் குறித்து கடை உரிமையாளர் பேசியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த ஐந்து நாள் திருவிழாவின் முக்கிய தினமான நேற்று, காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியின் புகழ்பெற்ற மற்றும் நூற்றாண்டுகள் பழைமையான ‘கண்டேவாலா’ இனிப்புக் கடைக்கு திடீர் பயணம் மேற்கொண்டார்.
அங்கு சென்ற அவர், இனிப்புகள் வாங்குவதோடு மட்டுமல்லாமல், இமார்தி மற்றும் பேரீச்சம்பழ லட்டுகளைத் தயாரித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட அவர், ‘இந்தக் கடையின் இனிமை இன்றும் தூய்மையாகவும், பாரம்பரியமாகவும், மனதைத் தொடுவதாகவும் இருக்கிறது. தீபாவளியின் இனிப்பு தட்டுகளில் மட்டுமல்ல, உறவுகளிலும் சமூகத்திலும் தான் இருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் வருகை குறித்து அந்தக் கடையின் உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ராகுல் காந்தி தனது வீடு, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகள் வாங்க வந்திருந்தார். அப்போது அவரிடம், ‘சார், இது உங்கள் சொந்தக் கடை’ என்றேன். அவரது தந்தை மறைந்த ராஜீவ் காந்திக்கு இமார்தி இனிப்பு மிகவும் பிடிக்கும் என்பதால், அதைச் செய்து பார்க்குமாறு கூறினேன். அவரும் அதைச் செய்தார். அவருக்கு பேரீச்சம்பழ லட்டு மிகவும் பிடிக்கும் என்பதால் அதையும் செய்தார்’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘இந்தியாவின் ‘பிரம்மச்சாரி’ அவர்தான் என்பதை எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். அதனால் நான், ‘ராகுல் ஜி, தயவுசெய்து சீக்கிரம் திருமணம் செய்துகொள்ளுங்கள். உங்கள் திருமணத்திற்கான இனிப்பு ஆர்டரை பெறுவதற்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்’ என்று கூறினேன்’ எனத் தெரிவித்தார். ராகுல் காந்தியிடம் கடை உரிமையாளர் விடுத்த இந்த கலகலப்பான கோரிக்கை, அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.