Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுவீடன் ஆர்வலரை தடுத்து நிறுத்தம்; டெல்லியில் மாணவ அமைப்பினர் கைது

புதுடெல்லி: சுவீடன் ஆர்வலர் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரத்தை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவ அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். காசாவின் கடல் பகுதியை மீறி, மனிதாபிமான உதவிகளை வழங்க முயன்ற ‘ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா’ கூட்டணியின் ‘மேட்லீன்’ என்ற கப்பலை இஸ்ரேலிய கடற்படை கடந்த திங்களன்று தடுத்து நிறுத்தியது. அதில், சுவீடன் சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்டோர் இருந்தனர்.

இந்த சட்டவிரோத கைது மற்றும் காசாவில் நடக்கும் போரைக் கண்டித்து, டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் நிதிஷ் குமார் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர் சங்கச் செயலாளர் சவுரப் உள்ளிட்ட சுமார் 30 மாணவர் தலைவர்களை டெல்லி காவல்துறை கைது செய்தது.

மாணவர் அமைப்புகள் உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். மேலும், இஸ்ரேலுடனான ஆயுத ஒப்பந்தங்கள் மற்றும் வர்த்தக உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள மாணவர் அமைப்புகள், இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து இன்று ஜந்தர் மந்தரில் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.