மதுரை: மதுரை கூடல் புதூர் பகுதியில் உள்ள முடக்கத்தான் அம்பேத்கர் காலனி பகுதியை சேர்ந்தவர் கோபிராஜ் (40). இவரது மனைவி பாலகாயத்ரி (35). யுவஸ்ரீ(10), கனிஷ்கா (5) என 2 மகள்கள் இருந்தனர். கோபிராஜ்க்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாலகாயத்ரி சில நாட்களுக்கு முன், அவரது தாயார் வீட்டிற்கு சென்றார். இதனால் மன வேதனையடைந்த கோபிராஜ், நேற்று இரவு இரு மகள்களுக்கும் அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட குழந்தைகள் இருவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளனர். இருப்பினும் இறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை இல்லாத கோபிராஜ், அவர்களின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே, அவர்கள் வீட்டில் எந்த சத்தமும் இல்லாமல் இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர், உள்ளே வந்து பார்த்துள்ளனர். அப்போது குழந்தைகள் இருவரும் இறந்து கிடந்ததுடன், கோபிராஜ் தற்கொலை செய்து கொண்ட விபரம் தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கூடல் புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மூவரின் உடல்களையும் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


