கார் மீது லாரி உரசியதில் தகராறு சஸ்பெண்ட் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் லாரி டிரைவர் மீட்பு: கடத்தல் புகாரில் மும்பை போலீசார் அதிரடி
மும்பை: மும்பையை சேர்ந்த லாரி டிரைவரின் பெயர் பிரகலாத் குமார்(22). கடந்த சனிக்கிழமை இவர் சிமெண்ட் லாரியை ஓட்டிக்கொண்டு முலுண்ட்-ஐரோலி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது லாரி லேசாக உரசிவிட்டது. இதனை தொடர்ந்து காரில் இருந்த இரண்டு பேர் கீழே இறங்கி வந்து லாரி டிரைவர் குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு வா என்று கூறியபடி குமாரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றனர். ஆனால் போலீஸ் நிலையம் செல்லாமல் குமாரை கடத்திக் கொண்டு வேறு எங்கேயோ சென்றுவிட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
குமார் புனேயில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரி பூஜா கேட்கரின் பங்களாவில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அவரை போலீசார் மீட்டனர். ரபாலே போலீசார் ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்ததோடு கடத்தியவர்கள் யார் என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள. மேலும் விசாரணைக்கு வருமாறு பூஜாவின் தாயார் மனோரமா கேட்கருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதன் இடையே போலீசாரை வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தவிடாமல் தடுத்து அவர்கள் தங்கள் கடமையை செய்யவிடாத குற்றத்திற்காக மனோரமா கேட்கர் மீது புனே, சதுஷுருங்கி போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.