Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தஞ்சை-விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதைக்கான இறுதி கட்ட ஆய்வு பணிகள்

*விரைந்து முடிக்க ரயில் பயணிகள் வலியுறுத்தல்

கும்பகோணம் : தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதைக்கான இறுதி ஆய்வு பணிகளை விரைந்து முடிக்க ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். கும்பகோணம் பாணாதுறை மேல்நிலை பள்ளியில் தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க 62வது ஆண்டு நிறைவு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க துணைத்தலைவர் மாறன் தலைமை வகித்தார்.

சங்கத்தின் கடந்த ஆண்டு செயல்பாடுகளை விளக்கி செயலாளர் கிரி பேசினார். அப்போது, தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதைக்கான ஆய்வு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மகாமக திருவிழாவிற்கு முன் தஞ்சாவூர்-மயிலாடுதுறை இடையேயான இரட்டை வழி ரயில் பாதை பணிகளை நிறைவு செய்ய வேண்டும், தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக புதுடெல்லிக்கு செங்கோல் விரைவு ரயில் இயக்கவும், திருச்சி-தாம்பரம் இடையே இயக்கப்படும் இன்டெர்சிட்டி ரயிலை தடையின்றி தொடர்ந்து நிரந்தரமாக இயக்க கோரியும் சம்பந்தப்பட்ட துறையினரை கேட்டுக்கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் இணைச்செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் நடராஜகுமார், தீபக்வசந்த், ரேவந்த்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் சங்க இணை செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.