சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் அரசின் திட்டங்களை தொடர ஐகோர்ட் வழங்கிய உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு
டெல்லி: சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் அரசின் திட்டங்களை தொடர ஐகோர்ட் வழங்கிய உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ரேஸ் கிளப் நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கிண்டியில் உள்ள ரேஸ் கிளப் கோல்ப் மைதானத்தில் பசுமை பூங்கா, நீர் நிலைகள் அமைக்கும் பணியை தொடரலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் அரசு திட்டங்களான மழைநீர் சேமிப்பு குளங்கள் அமைப்பது போன்றவற்றைத் தொடரலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவை ரத்து செய்து, பொது நலன் கருதி இந்தத் திட்டங்களைத் தொடரலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சுமார் 160 ஏக்கர் சென்னை கிண்டியில் ரேஸ் கிளப் இடத்தை குத்தகைக்கு வழங்கியதில் நிலத்துக்கு 730 கோடியே 86 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்தும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வாடகை பாக்கியை செலுத்தத் தவறினால் ரேஸ் கோர்ஸ் நிர்வாகத்தை சட்டப்படி வெளியேற்றி, நிலத்தை அரசு சுவாதீனம் எடுக்கலாம். அந்த நிலத்தை மக்களின் பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதையடுத்து, குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, சென்னை கிண்டி ரேஸ் கிளப்பிடம் இருந்து மீட்கப்பட்ட இடத்தில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக் கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பசுமைவெளி பூங்கா மற்றும் மாநகராட்சி சார்பில் மழை நீரை சேமிக்க நான்கு குளங்கள் என மழைநீர் சேகரிப்பு திட்டமும் அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தத் திட்டங்களை அமல்படுத்துவதை எதிர்த்தும், நிலத்தை அரசு சுவாதீனம் செய்ததை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரேஸ் கிளப் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பொதுநலன் கருதி தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், தற்போது மழைக்காலம் என்பதால் மழைநீர் சேகரிப்பு திட்டம் அவசியம் எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் சென்னை ரேஸ் கிளப்பில் அரசுத் திட்டங்களைத் தொடர உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக ரேஸ் கிளப் நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஏதேனும் மாற்றங்கள், விளக்கங்கள் தேவைப்பட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி முறையிடலாம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
