Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வக்ஃபு வாரிய சட்ட விதிக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வக்ஃபு வாரிய சட்ட விதிக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை விதிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேசமயம் சில சட்ட விதிகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது

ஒன்றிய அரசு கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த மே மாதம் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு வக்பு திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. நாடாளுமன்றத்திலேயே பல்வேறு எதிர்க்கட்சிகளும் வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். ஆனால், அந்த எதிர்ப்புகளைத் தாண்டி ஆளும் தரப்பு வக்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளிக்கவே வக்பு திருத்தம் சட்டமானது.

இருப்பினும், ஒன்றிய அரசு கொண்டு வந்த இந்த வக்பு திருத்தச் சட்டத்தை பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்த்தனர். இது தொடர்பாக சுமார் 70க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு விசாரிக்க வேண்டி இருந்தது. இருப்பினும், தான் சீக்கிரம் ஓய்வு பெறுவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி சஞ்சீவ் கன்னா, இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை என்றும் புதிய தலைமை நீதிபதி இந்த வழக்கை விசாரிப்பார் என்றும் கூறியிருந்தார்.

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஓய்வைத் தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. கடந்த மே மாதம் இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது பல்வேறு தரப்பினரும் பல முக்கியமான வாதங்களை முன்வைத்தன.

மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில், சிங்வி என பல்வேறு தரப்பினரும் பல முக்கிய வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தது. இந்தச் சூழலில் தான் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஒருவர் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறாரா? என்பதை முடிவு செய்வதற்கான விதிகளை மாநில அரசுகள் வகுக்கம் வரை தடைதொடரும். வக்ஃபு வாரியம் தொடங்க ஒருவர் குறைந்தபட்சம் 5 ஆண்டு இஸ்லாம் மதத்தை பின்பற்ற வேண்டும் என்ற ஒன்றிய அரசின் நிபந்தனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. தனிப்பட்ட நபரின் உரிமை குறித்து மாவட்ட ஆட்சியர் தீர்மானிக்க முடியாது. வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்கள் எண்ணிக்கை 3-க்கு மேல் இருக்கக் கூடாது. முழு சட்டத்தையும் நிறுத்தி வைக்க முழு முகாந்திரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.