Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாதாரண வழக்குகளுக்கெல்லாம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேச சட்ட மேலவை செயலகத்தில் நடைபெற்ற ஆட்சேர்ப்பு முறைகேடுகள் தொடர்பாக, அலகாபாத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, சிபிஐ மூலம் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் அடங்கிய அமர்வு, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியது.

இந்த வழக்கை மீண்டும் மறுவிசாரணை செய்ய உயர்நீதிமன்றத்திற்கே திருப்பி அனுப்பியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், சிபிஐ விசாரணை என்பது வழக்கமான முறையில் உத்தரவிடப்படக் கூடியதல்ல என்று மீண்டும் வலியுறுத்தினர். மேலும், ‘இதுபோன்ற வழக்குகளில், கடைசி நடவடிக்கையாகவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் குறிப்பிட்டனர். புலனாய்வு அமைப்பின் செயல்பாட்டில் பெரும் தோல்வி ஏற்பட்டிருந்தாலோ, உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்தாலோ அல்லது மாநில காவல்துறையின் விசாரணை நடுநிலையாக இருக்காது என்ற வலுவான சந்தேகம் எழுந்தாலோ மட்டுமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

ஆட்சேர்ப்பு தொடர்பான முறைகேடுகள், பொதுமக்களின் நம்பிக்கையை பெருமளவில் சீர்குலைத்தால் தவிர, அத்தகைய வழக்குகளை சிபிஐ போன்ற மத்திய சிறப்பு புலனாய்வு அமைப்புகளிடம் ஒப்படைக்கக் கூடாது. மாநில காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்று கூறுவது மட்டுமே, ஒரு வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கான போதுமான காரணமாக இருக்காது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெளிவாகக் கூறியுள்ளனர்.