Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் விவகாரம் போலி கொலையாளிகளை வைத்து வழக்கை முடிக்க திட்டமிட்டது அம்பலம்

*திடுக்கிடும் தகவல்

கோவை : தோட்டத்து கிணற்றில் எலும்பு கூடுகள் மீட்கப்பட்ட வழக்கில் போலி கொலையாளிகளை சரண்டர் செய்ய வைத்து கொலை வழக்கை மூடி மறைக்க திட்டமிட்டது அம்பலமாகி உள்ளது. கோவை மாவட்டம் செட்டிபாளையம் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் கடந்த 4 நாட்களுக்கு முன்பாக வாலிபர் ஒருவரின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் கொலையான வாலிபர் சென்னையிலேயே கொலை செய்யப்பட்டு அங்கிருந்து கார் மூலம் கோவை கொண்டு வந்து தனது நண்பர்கள் வேலை செய்யும் தோட்டத்து கிணற்றில் வீசி விட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் போலீசார் விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த ஜெயராமன் என்பது தெரிய வந்தது. இந்த கொலை தொடர்பாக பாளையங்கோட்டையை சேர்ந்த பாலமுருகன், முருகப்பெருமான் ஆகியோர் செட்டிபாளையம் போலீசில் சரணடைந்தனர்.

அப்போது பணியில் இருந்த சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை, இந்த வழக்கில் பாலமுருகன், முருகப்பெருமான் ஆகிய இருவரை மட்டும் கொலையாளிகளாக கருதி வழக்கை முடித்து வைக்கும் முடிவில் இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்த வழக்கு தொடர்பாக கருமத்தம்பட்டி டிஎஸ்பி தங்கராமனுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் மாவட்ட எஸ்பி கார்த்திகேயனிடம் அனுமதி பெற்று தனிப்படை அமைத்து, கொலை வழக்கு விசாரணையை இன்ஸ்பெக்டருக்கு தெரியாமல் நடத்தியுள்ளார்.

இந்த விசாரணையில், ஜெயராமன் சென்னையில் பாளையங்கோட்டையை சேர்ந்த அவரது நண்பர்கள் நியூட்டன், பெனிடோ ஆகியோர் கொலை செய்ததும், அங்கிருந்து தங்களது நண்பர்கள் 2 பேர் உதவியுடன் ஜெயராமன் சடலத்தை கார் மூலமாக கோவை கொண்டு வந்து மலுமிச்சம்பட்டியில் பாலமுருகன், முருகப்பெருமான் ஆகியோர் கிணற்றில் போட்டதும் உறுதி செய்யப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் பாலமுருகன், முருகப்பெருமான் ஆகிய இருவரும் கொலையாளிகளாக ஒப்புக்கொண்டு போலீசில் சரண்டரானதில் ரூ.5 லட்சம் வரை பேரம் பேசப்பட்டதும் தெரியவந்தது. மேலும் சரணடைந்தவர்களை வைத்து கொலை வழக்கை முடிக்கவும் திட்டமிட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கினை சூலூர் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை சாிவர கையாளாமல் இருந்ததோடு அவரது செயல்பாடுகள் மீது அதிருப்தி அடைந்ததால் நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் இவ்வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.