டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலுக்கான இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்தார். ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நாட்டின் 17வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடக்க உள்ளது. இதில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநரும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணனும் (68), இந்தியா கூட்டணி கட்சிகளின் பொது வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் (79) வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி முன்னிலையில் பாஜ கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுத் தாக்கலின்போது மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்டோர் உடன் உள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, சரத்பவார், திருச்சி சிவா, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் உடன் உள்ளனர். தேர்தல் நடத்தும் அதிகாரியான நாடாளுமன்ற செயலாளரிடம் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.
2007 முதல் 2011 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியில் இருந்தவர் சுதர்சன் ரெட்டி. ஆந்திர ஐகோர்ட் நீதிபதியாகவும், குவஹாத்தி ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர். இந்தியா கூட்டணியில் இல்லாத ஆம் ஆத்மி கட்சியும் சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி ஒருங்கிணைந்த ஆந்திராவைச் சேர்ந்தவர்.