நெல்லை: நெல்லை பல்கலைக்கழகத்தில் நடந்த கலைவிழாவில் மாணவர்கள் நாட்டுப்புற நடனமாடி அசத்தினர். நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நாட்டு நலப்பணித் திட்டத்துடன் இணைந்து மாவட்ட அளவிலான தேசிய இளைஞர் கலை விழா சுந்தரனார் அரங்கில் நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் வழிகாட்டுதலின் படி நடந்த இவ்விழாவில், பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரட்டீஸ் தலைமை தாங்கி பேசினார். இன்றைய இளைஞர்கள் தங்களது தனித்திறமைகளை கலை நிகழ்ச்சிகள் வழியாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் லெனின், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெளியப்பன் ஆகியோர் பேசினர்.
விழாவையொட்டி நாட்டுப்புற நடனம், நாட்டுப்புறப் பாடல், பேச்சுப்போட்டி, கவிதை, கதை எழுதல் மற்றும் ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லூரி மாணவர்கள் நட்டுப்புற நடனமாடி அனைவரையும் கவர்ந்தனர். போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். நெல்லை மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இறுதியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜாஸ்மின் சுதா நன்றி கூறினார்.


