Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

25% இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க பள்ளிகளுக்கு அவகாசம்: உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு

சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகள் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களை கொண்டு நிரப்ப வேண்டும். இந்நிலையில், 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டார்.

இந்த சுற்றறிக்கையை எதிர்த்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கல்விக் கட்டணத்தை திருப்பி வழங்கும் வகையில் மட்டுமே இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் நலச் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன் கவுடர் முன்பு விசாரணைக்கு வந்த போது, கல்வி உரிமைச் சட்ட 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தை திறக்காததால், அனைத்து இடங்களையும் பள்ளிகளே நிரப்பி விட்டன. தற்போது குறுகிய கால அவகாசத்தில் கல்வி உரிமைச் சட்டத்தில் இடஒதுக்கீடு பெற தகுதியான மாணவர்கள் பட்டியலை தயாரிக்க இயலாது என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு உத்தரவை ஏற்று பல பள்ளிகள் மாணவர்கள் பட்டியலை அனுப்பியுள்ளன. இந்த பட்டியலை சரிபார்த்து, அந்த பள்ளிகளுக்கு மாணவர்களின் கல்விக்கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்றார். இதையடுத்து, மாணவர்கள் பட்டியலை அனுப்புவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மாணவர்கள் பட்டியலை அனுப்பாத பள்ளிகளுக்கான கால அவகாசம் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. பட்டியலைப் பெற்று சரிபார்க்கும் நடவடிக்கைகளை அரசு தொடங்க வேண்டும். இதன் பிறகு கால அவகாசம் கோரக் கூடாது என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.