*போலீசார் சமரசம்
பென்னாகரம் : சரக அளவிலான கபடி போட்டியில் காலதாமதமாக வந்த அணியை விளையாட அனுமதிக்காததால், மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பென்னாகரம் சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 10ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை மஞ்சநாயக்கனஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி நடத்துகிறது.
இந்நிலையில், நேற்று பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 22 அணிகள் கலந்து கொண்ட நிலையில், நெருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணி தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், விளையாட்டு குழுவினர், அந்த அணியை விளையாட அனுமதி மறுத்தனர். இதனை கண்டித்து நெருப்பூர் அணியினர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களுக்கு அறிவுரை கூறி மாணவர்களை அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.