சென்னை: மாணவர்களின் வேலைவாய்ப்பு சூழலை உறுதி செய்யப்பட வேண்டும் என அமைச்சர் கோவி. செழியன் கேட்டுக் கொண்டார். உயர்கல்வித் தரத்தினை மேலும் உயர்த்திடவும், உயர்கல்வியை மாணாக்கர்களுக்கு கொண்டு சேர்ப்பதை உறுதி செய்வதுடன், திறன்மிகுந்த மாணாக்கர்களை உருவாக்குவது குறித்து இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தலைமையில் உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அண்ணா, சென்னை, பாரதியார், பாரதிதாசன், மதுரை காமராசர், மனோன்மணியம், அழகப்பா, அண்ணாமலை, பெரியார், அன்னை தெரசா, திருவள்ளுவர், திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரியர் பல்கலைக்கழகம் ஆகிய 13 அரசு பல்கலைக்கழகங்களைச் சார்ந்த பதிவாளர்கள், தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் பல்கலைக்கழக உள்தர உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர்களுடனான (IQAC Coordinators), ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் கீழ் நடத்தப்படும் பாடப்பிரிவுகளின் செயல்பாடுகள் மற்றும் அது சிறப்பான முறையில் செயல்படுகிறதா என்பது குறித்தும், மாணாக்கர்களுக்கு வேலைவாய்ப்புகள் சிறந்த முறையில் கிடைக்கப்பெறுகிறதா என்பது குறித்தும் உயர்கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டங்கள் மற்றும் கேள்வித்தாள்களின் தரம் குறித்தும் அமைச்சர் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், உயர்கல்வி மாணவர்களின் கற்றல் மேம்பாடு, மாநில மற்றும் தேசிய அளவிலான தொழில்நுட்ப போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணாக்கர்களின் பங்கேற்பு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. உயர்கல்வி நிறுவனங்களில் வழங்கப்பட்டு வரும் பாடப்பிரிவுகளின் கிரெடிட் (credits) கட்டமைப்பு பற்றியும், பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி சூழல் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப புதிய பாடப்பிரிவுகள் தொடங்குதல், மாணவர்களின் மொழியாற்றலை மேம்படுத்துதல், கல்லூரி மாணாக்கர்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் வகையிலான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குதல் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், மாணாக்கர்கள் தாங்கள் பெற்ற கல்வி அறிவினை வெளிபடுத்த ஏதுவாக ஆங்கில மொழியாற்றலை வளர்த்துக் கொள்ள தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், பாடப்பொருள் சார்ந்த செயல்பாடுகள் குறித்த இத்தகைய ஆய்வுகளையும் மேற்கொள்வதன் மூலம் மாநிலத்தில் உயர்கல்வியின் தரம் உயர்வதோடு மாணாக்கர்களின் திறன் மேம்பாடும், வேலைவாய்ப்பு சூழலும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி அளவில் முழுமையான செயல்படுத்தப்படுவதை தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம், கல்லூரிக் கல்வி இயக்ககம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தோடு இணைந்து கண்காணித்து உறுதி செய்யும் என்றும், தமிழ்நாட்டில் உயர்கல்வியின் தரத்தினை வலுப்படுத்தும் பொருட்டு இனிவரும் காலங்களில் இத்தகைய பாடப்பொருள் சார்ந்த ஆய்வுகள், பல்கலைக்கழக அளவிலும், கல்லூரிகள் அளவிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் உயர்கல்வித்துறை அரசு செயலர் பொ. சங்கர் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத் துணைத் தலைவர் எம்.பி. விஜயகுமார், (ஓய்வு), கல்லூரிக் கல்வி இயக்கக ஆணையர் எ. சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர் செயலர் டி. வேல்முருகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.