‘மிகுந்த மனஅழுத்தத்தில் உள்ளேன்’; எனது பிரச்னையை மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும்:மயிலாடுதுறை டிஎஸ்பி பேட்டி
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் இன்று காலை அலுவலகம் செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என் மீது முந்தைய காலங்களில் நடந்த பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். அப்போது நான் தவறு செய்திருந்தால் என்னை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால் என்னை இடமாற்றம் செய்கிறார்கள். ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம். இதுதான் காவலர்களின் நிலை. ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு ஊதிய உயர்வு உண்டு. எனது ஒன்பது ஊதிய உயர்வை தடுக்கின்றனர்.
என் மீது பாலியல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள். ஆனால் தற்போது வரை ஏன் என்னை சஸ்பெண்ட் செய்யவில்லை. என்னை விசாரிக்காமல் எப்படி டிஐஜி சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைக்கலாம். நான் அனைத்திற்கும் தயாராக உள்ளேன்.சென்னையில் உள்ள எனது தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. இது தொடர்பாக விடுமுறை கேட்டு செல்போனில் எஸ்பிக்கு தகவல் அனுப்பி உள்ளேன். ஆனால் அவர் தற்போது வரை பதில் அளிக்கவில்லை.
தமிழக டிஜிபி ஏன் என்னை அழைத்து இன்னும் விசாரிக்கவில்லை எனவும் தெரியவில்லை.நான் காவல்துறையில் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். என் மீது தவறு இருந்தால் தூக்கில் போடவும். தேசிய மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக எனது பிரச்சனையை விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.