தெரு நாய் கடி விவகாரம் பள்ளி, மருத்துவமனை, பஸ் நிலையங்களில் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுடெல்லி: நாடு முழுவதும் தெரு நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தெரு நாய்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. நாய் கடி காரணமாக ராபிஸ் நோய் தாக்கத்தினால் உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதுதொடர்பான விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நீதிபதிகள் விக்ரம்நாத், சந்திப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது, இந்த விவகாரத்தில் வழிகாட்டு நெறிமுரைகாளுடன் கூடிய இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர்.
இதையடுத்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதில்,\\”தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க, ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள், சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் உள்ளிட்ட அனைத்து விலங்குகளையும் உடனடியாக அப்புறப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு அகற்றப்படும் விலங்குகள் கோசாலைகள் அல்லது காப்பகங்களுக்கு மாற்றப்பட வேண்டும்.
இந்த உத்தரவுகளை அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் கண்டிப்பாக செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க நேரிடும். அதேப்போன்று
தெருநாய் தொல்லையைக் கட்டுப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, பொது விளையாட்டு வளாகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்றவற்றைச் சுற்றி உறுதியான வேலிகள் அமைத்து, தெருநாய்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் இந்த வளாகங்களில் இருந்து தெருநாய்களைப் பிடித்து, தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்த பிறகு, பிரத்யேக காப்பகங்களுக்கு மாற்ற வேண்டும்.
மேலும் அந்த குறிப்பிட்ட வளாகங்களில் இருந்து பிடிக்கப்படும் தெருநாய்களை, மீண்டும் அதே இடத்தில் கொண்டுவந்து விடக்கூடாது. அவ்வாறு அனுமதிப்பது, அத்தகைய நிறுவனங்களை தெருநாய்களின் தொந்தரவிலிருந்து விடுவிக்கும் முக்கிய நோக்கத்தையே சிதைத்துவிடும். இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட பிறகு, மூத்த வழக்கறிஞர்கள் சிலர் தங்கள் தரப்பு வாதங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், உள்ளாட்சி அமைப்புகள் இந்த வளாகங்களில் தெருநாய் வாழ்விடங்கள் இல்லை என்பதை உறுதி செய்ய, அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
இதுதொடர்பான விரிவான அறிக்கையை எட்டு வாரங்களுக்குள் அனைத்து மாநில அரசுகளும் தாக்கல் செய்ய வேண்டும். அதேநேரத்தில், பொதுவான பகுதிகளுக்கு விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகள் தொடர்ந்து பொருந்தும் என்பது தொடரும். அரசு அலுவலக வளாகங்களில் ஊழியர்கள் நாய்களுக்கு உணவளித்து வளர்ப்பது குறித்தும் விரைவில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிமன்றம், இந்த அனைத்து உத்தரவுகளையும் செயல்படுத்தி, சில வாரங்களுக்குள் இணக்க அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

