தெரு நாய்கள் தொடர்பான வழக்கு: அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!!
டெல்லி: தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் 26 மாநில தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தெரு நாய்களின் தொல்லை குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. அத்துடன், இது தொடர்பாக தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட நான்கு மனுக்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி பிறப்பித்த உத்தரவில், நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் உள்ள இந்த விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதிகள் அமர்வு முடிவு செய்தது.
மேலும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் வழக்கில் ஒரு தரப்பாக சேர்த்து, பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தெரு நாய்கள் தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு தெலங்கானா, மேற்கு வங்கம் மற்றும் டெல்லி மாநகராட்சி நிர்வாகம் மட்டுமே பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாததற்கான விளக்கத்தை அளிக்க, தமிழ்நாடு உள்பட 26 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களும், 8 யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களும் வருகின்ற நவம்பர் 3ம் தேதி அன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது பற்றி ஏன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை என விளக்கம் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ள டெல்லி தலைமைச் செயலாளர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாததற்கும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், டெல்லி தலைமைச் செயலாளர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
