Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தெரு நாய்கள் பிரச்னை; வெளிநாடுகளை போல் இங்கும் நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை

சென்னை: வெளிநாடுகளில் தெருநாய் பிரச்னை எவ்வாறு கையாளப்படுகிறது? என்பதை தெரிந்து அதை நம் நாட்டில் பின்பற்றலாம் என்று உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில்,‘ சென்னையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் அழைத்துச் செல்லப்பட்ட ராட்வீலர் நாய்கநாய்களை தடை செய்வது அல்லது முறைப்படுத்துவதற்கு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்,’என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தெரு நாய் விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களின் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்டு வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்ட நீதிபதிகள், ‘தெரு நாய் விவகாரம் தீவிரமானது. தெருக்களில் பிடிக்கப்பட்டு, இனப்பெருக்க கட்டுப்பாடு செய்து அதே பகுதிகளில் விடும் பட்சத்தில் ரேபிஸ் நோய் தாக்கிய நாய்களை எங்கு பராமரிக்கப் போகிறீர்கள்,’ என்று அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

அதற்கு, தனி காப்பகங்கள் அமைக்க உள்ளதாக அரசுத்தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், அப்படி காப்பகங்கள் அமைக்கப்பட்டால், அவற்றுக்கு உணவளிக்கச் செல்வதற்கு யாருக்கு தைரியம் உள்ளது?. அதுபோன்ற நாய்களை கையாள வேறு நடவடிக்கைகளை எடுத்தால், மிருகவதை சட்டத்தைச் சுட்டிக்காட்டி தொண்டு நிறுவனங்கள் வழக்குகள் தொடரும். எனவே, வெளிநாடுகளில் தெருநாய் பிரச்னை எவ்வாறு கையாளப்படுகிறது? என்ன தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை தெரிந்து அதை நம் நாட்டில் பின்பற்றலாம்,’ என்று யோசனை தெரிவித்தனர்.