+2 பொதுத்தேர்வில் மாணவர்கள் ‘ஆப்சென்ட்’ ஆவதைக் குறைக்க பள்ளிக்கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த நடவடிக்கை யின் பலன் 2026 மார்ச் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வில் நிச்சயம் பிரதிபலிக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். +2 பொதுத்தேர்வு உயர்கல்விக்கான நுழைவு வாயிலாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதில் தேர்வு எழுத வராமல் ‘ஆப்சென்ட்’ ஆகும் மாணவர்களின் எண்ணிக்கை பள்ளிக்கல்வித்துறைக்குத் தொடர் தலைவலியை அளித்து வருகிறது. புள்ளிவிவரத்தின்படி கடந்த 2022-23 கல்வியாண்டுக்கு 2024 மார்ச் மாதம் நடந்த தேர்வில் 8.51 லட்சம் பேர் விண்ணப்பித்ததில், மொழிப் பாடத்தை 50,674 பேர் எழுதவில்லை. இந்த அதிக ஆப்சென்ட்டுக்கு, கொரோனா காலத்தில் யாரையும் நீக்காமல், ஒரு நாள் பள்ளிக்கு வந்திருந்தாலும் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டதே காரணம் என்று கல்வித்துறை தெரிவித்தது. 2023-24 கல்வியாண்டில் 7.80 லட்சம் பேர் விண்ணப்பித்ததில், மொழிப் பாடத்தில் 12,364 பேரும், ஆங்கிலப் பாடத்தில் 12,696 பேரும் ஆப்சென்ட் ஆகினர். 2024-25 கல்வியாண்டில் 8.02 லட்சம் பேர் விண்ணப்பித்ததில், மொழிப்பாடத்தை 11,430 பேர் எழுதவில்லை. ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரத்துக்கும் குறையாமல் மாணவர்கள் பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆவது தொடர்கதையாகி வருகிறது. இதையடுத்து 2025-26 கல்வியாண்டுக்கான 2026 மார்ச் தேர்வில் 8.07 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதில் மாணவர்கள் ஆப்சென்ட் ஆவதை தடுக்க முறையாகப் பள்ளிக்கு வந்த மாணவர்களின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஹால் டிக்கெட் வெளியிடுவது. ஆசிரியர்கள், ஆலோசகர்களைக் கொண்டு பொதுத்தேர்வு குறித்த அச்சத்தைப் போக்கி, தைரியமாக எதிர்கொள்ள அறிவுரை வழங்குவது. தேர்ச்சி பெற முடியாதோ என நினைக்கும் மாணவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்குவது என்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
+
Advertisement


