Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை உயர்மட்ட மேம்பால பணிக்கான எஃகு கட்டமைப்புகள் தயாரிப்பு இடத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!

ஹைதராபாத்: தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை உயர்மட்ட மேம்பால பணிக்கான எஃகு கட்டமைப்புகள் தயாரிப்பு இடத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, 3.20 கி.மீ. நீளத்திற்கு ரூ.621 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. பணியை விரைவில், தரமான முறையில் நிறைவு செய்யும் வகையில், முன்னோக்கிய கட்டமைப்பு (Pre-fabricated) முறையில், சுமார் 15,000 டன் எஃகுக் கட்டமைப்புகள் (Pier, Pier-Cap, Girder) உருவாக்கப்பட்டு வருகின்றன. உற்பத்தி பணிகள் வதோதரா, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள 5 தொழிற்சாலைகளில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை அமைச்சர் எ.வ.வேலு இன்று முன்னேற்றப் பணிகளை நேரில் ஆய்வு செய்து, உற்பத்தி தரத்தையும், பணிகளை விரைவில் முடிக்கும் பொருட்டு, நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள கே.பி. கிரீன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் முன்வார்க்கப்பட்ட எஃகு தூண்கள் (Pier), மேல்தாங்கிகள் (Pier-Cap), உத்திரங்கள் (Girder) ஆகியவற்றின் உற்பத்தியையும், தரத்தினையும், சோதனைச் சான்றுகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். மேம்பாலப் பணிகள் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவு செய்யப்படுவதை உறுதி செய்ய தினசரி கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. உற்பத்தி முடிந்தவுடன் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, கட்டுமான பணிகள் வேகமாக மேற்கொள்ளப்படும். தரச்சோதனை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளில் எந்தவித சலுகையும் செய்யப்படமாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த மேம்பாலப் பணிகள் நிறைவடைந்தவுடன், அண்ணாசாலைப் பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெரிசல் குறையும், தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையேயான பயண நேரம் பெரிதும் குறையும், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வசதிகள் ஏற்படும், இம்மேம்பாலம் சர்வதேச தரத்திற்கு இணையான கட்டமைப்பு தரத்தில் அமையப்பெற்று, நீடித்த பயன்பாடு வழங்கும் என்றும் அமைச்சர் எடுத்துரைத்தார்கள். இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கு.கோ.சத்தியபிரகாஷ், நெடுஞ்சாலைத்துறை சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் இரா.சந்திரசேகர், கண்காணிப்புப் பொறியாளர் வி.சரவணசெல்வம் மற்றும் NKAB தொழிற்சாலையை சேர்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.