Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆய்வு: தகுதியுள்ள அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காண உத்தரவு

சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அப்போது தகுதியுள்ள அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காண அவர் உத்தரவிட்டார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று , “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், துறை வாரியாக பெறப்பட்ட மனுக்கள், அதன் மீதான தீர்வு மற்றும் நிலுவை விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து, உரிய கால கட்டத்திற்குள் தீர்வு காணப்படுவதை கண்காணித்திடவும் துறை செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது, இதுவரை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் அரசின் 15 துறைகளில் பட்டியலிடப்பட்ட 46 சேவைகளில் வரப்பெற்ற 14,54,517 மனுக்களில், 7,23,482 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தீர்வு செய்யப்பட்ட மனுக்களில், 5,97,534 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது தீர்வுசெய்யப்பட்ட மனுக்களில் 83% ஆகும் என்று முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், தகுதியுள்ள அனைத்து மனுக்களும் தீர்வு காணப்பட வேண்டும். வருவாய், கூட்டுறவு, ஆதிதிராவிடர், எரிசக்தி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை போன்ற முக்கிய துறைகளின் மனுக்கள் மீது அதிக கவனம் செலுத்திட வேண்டும். நகராட்சி நிர்வாகத் துறையில் சொத்து வரி, குடிநீர் தொடர்பான கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை பொறுத்தவரை மக்கள் அளிக்கும் அனைத்து மனுக்கள் மீதும் விடுதலின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசு துறைச் செயலாளர்களிடமும், மாவட்ட ஆட்சியர்களிடமும் தலைமை செயலாளர் தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, பணிகளை ஒருங்கிணைத்து, மக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட வழிகாட்டுதலின்படி, வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை சிரத்தையுடன் கண்காணிக்கவும், மனுக்களின் மீது உரிய கால கெடுவிற்குள் சரியான தீர்வினை வழங்குவதை உறுதி செய்யவும், அனைத்து துறைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், முதல்வரின் முகவரித்துறை செயலாளர், சிறப்பு அலுவலர் பெ.அமுதா, நிதித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன், அரசு துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.