Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் தமிழக மீனவர்கள் 47 பேர் துப்பாக்கி முனையில் கைது: 5 விசைப்படகுகள் பறிமுதல்

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 47 பேரை, 5 விசைப்படகுகளுடன் துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் 330க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். இதில் மீனவர் ஒருவரின் படகு சேதமடைந்தது. இதையடுத்து மீனவர்கள் வேறு பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். இரவில் மீண்டும் இந்திய கடல் எல்லை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென 5 சிறிய ரக ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை சுற்றிவளைத்து 30 மீனவர்ளை சிறைபிடித்தனர். 4 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். பின், படகுகளுடன் மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதேபோல், காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த சிவராமனுக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று முன்தினம் அதிகாலை 3மணி அளவில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 17 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 1 மணி அளவில் அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்களின் விசைப்படகை சுற்றிவளைத்தனர். மேலும் படகில் இருந்த 17 மீனவர்களையும் துப்பாக்கி முனையில் கைது செய்ததோடு விசை படகையும் பறிமுதல் செய்தனர். அவர்களை இலங்கை காங்கேசன் துறை கடற்கரை முகாமிற்கு அழைத்து சென்றனர். இது மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.