Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓராண்டுக்கு பிறகு இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர் விடுவிப்பு: விமானம் மூலம் சென்னை வந்தார்

சென்னை: தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் 7 பேர், கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி, விசைப்படகில் கடலுக்குச் சென்று பாம்பன் துறைமுகத்தில் இருந்து 15 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அதிகாலை நேரத்தில் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் வந்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் கைது செய்து, படகையும் பறிமுதல் செய்து, இலங்கைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் எழுதி, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராமேஸ்வரம் மீனவர்களில் 6 பேரை விடுவித்து, அவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக தமிழ்நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஆனால், அந்தோணி என்ற மீனவர் விசைப்படகை ஓட்டிச் சென்றவர் என்பதாலும், அவர் இரண்டாவது முறையாக, இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு இருந்ததாலும், அவரை மட்டும் விடுதலை செய்யாமல் அவருக்கு ஒன்றரை ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இலங்கை அதிகாரிகளிடம் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதின் காரணமாக, ஓராண்டுக்கு மேலாக, இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரம் மீனவர் அந்தோணி கடந்த 1ம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தூதரக அதிகாரிகள் மீனவர் அந்தோணியை, தங்களுடைய பராமரிப்பில் வைத்து, அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தினர். அதன் பின்பு அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால், தூதரக அதிகாரி, அந்தோணிக்கு எமர்ஜென்சி சர்டிபிகேட் கொடுத்தார். அதோடு அவருக்கு விமான டிக்கெட் ஏற்பாடும் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, நேற்று காலை இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து சென்னைக்கு வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், மீனவர் அந்தோணி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் மீனவரை, தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.