Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இலங்கை காவலில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் அனைவரும் தாயகம் திரும்ப நடவடிக்கை: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதிய கடிதம்: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும், அவர்களது இயந்திரப் படகினையும் இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் சிறை பிடித்துள்ளனர். இந்திய மீனவர்களும் அவர்களது மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது ஆழ்ந்த கவலைக்குரியதாக உள்ளது.

கடந்த 2024ம்ஆண்டில் கைது செய்யப்பட்ட பல மீனவர்கள் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களும் 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை காவலில் உள்ளனர் என்பதை சுட்டி காட்டுகிறேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் மீன்பிடித் தொழிலை முதன்மை வாழ்வாதாரமாக நம்பியுள்ள கடலோர சமூகங்களை ஆழமாகப் பாதித்துள்ளது.

அவர்களின் குடும்பங்களுக்குக் கடுமையான துன்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நீண்டகாலப் பிரச்சனைக்குத் தீர்வு காண கூட்டுப் பணிக் குழுவை மீண்டும் உயிர்ப்பித்திடவும், இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நீடித்தத் தீர்வை அடைந்திட ஒருங்கிணைந்த முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு வழிவகை செய்ய வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.