இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்
ராமேஸ்வரம்: தமிழக கடலோரபகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக சிறைபிடிப்பது, தாக்குதல் நடத்துவது, அவர்களது படகுகளை சேதப்பாடுத்துவது என அட்டூழியங்களை செய்து வருகின்றனர். அதிமட்டுமின்றி சிறைபிடித்த மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்களின் 7 படகுகளை சிறைபிடித்து 57 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் 5-வது நாளாக போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த போராட்டம் 5-வது நாளாக நீடிக்கிறது. இதன் காரணமாக 800-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இந்த நிலையில், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தேசிய கொடியுடன் கருப்பு பேஜ் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மீனவ பெண்கள் மற்றும் மீனவ குழந்தைகள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.